கோவா மருத்துவமனையில்.. ஆக்சிஜன் இல்லாமல் 4 நாளில் 75 பேர் உயிரிழப்பு.. முதல்வர் மீது போலீசில் புகார்
பனாஜி: கோவா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நாளில் மட்டும் 75 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா தலத்துக்கு பெயர்போன கோவாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவாவில் 2,491 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 62 இறப்புகள் ஏற்பட்டு உள்ளன.
உயிரிழக்கும் நோயாளிகள்
மாநிலம் முழுவதும் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் தொடர்ந்து நோயாளிகள் இறந்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் மட்டும் இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 75 நோயாளிகள் இறந்துள்ளனர்.
75 பேர் உயிரிழப்பு
அதாவது செவ்வாயன்று 26 பேரும், புதன்கிழமை 21 பேரும், வியாழக்கிழமை 15 பேரும், இன்று வெள்ளிக்கிழமை மட்டும் 13 பேர் என மொத்தம் 75 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாததால் நோயாளிகள் தரையில் படுத்து வருகின்றனர். சில நோயாளிகள் ஸ்டோர் ரூமில் படுத்து வருகின்றனர்.
கொடூரமான கொலை
அரசின் பொறுப்பற்ற தன்மை, அலட்சியமே இத்தனை உயிர்கள் பறிபோக காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது தொடர்பாக கோவா ஃபார்வர்ட் கட்சி பா.ஜ.க.வை சேர்ந்த முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் மீது போலீஸ் புகார் அளித்தது. கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்தது முதல்வர் மற்றும் சுகாதார அமைச்சரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான கொலை என்று மாநில காங்கிரஸ் விளாசியுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் மீது கிரிமினல் புகார் கொடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எத்தனை படுக்கை வசதிகள் உள்ளன? ஆக்சிஜன் இருப்பு எவ்வளவு இருக்கிறது? மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் என்னென்ன? என்பது குறித்து இன்று இரவு 7 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மருத்துவனை அதிகாரிகளுக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் கோவா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.