டெல்லியில் கடும் பனிமூட்டம்: யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட 18 கார்கள்
டெல்லி: டெல்லியில் செவ்வாய்க்கிழமை காலை கடும் பனிமூட்டம் இருந்ததால் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் 18 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
டெல்லியில் காலை வேளையில் கடும்பனிமூட்டமாக உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை நொய்டாவை ஆக்ராவுடன் இணைக்கும் யமுனா எக்ஸ்பிரஸ்வே சாலையில் கார்கள் சென்று கொண்டிருந்தன. பனிமூட்டத்தால் முன்னாள் செல்லும் வாகனங்கள் சரியாகத் தெரியவில்லை.

காலை 8 மணிக்கு யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் சென்று கொண்டிருந்த 18 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. முதலில் டொயோட்டோ இன்னோவா டிரைவர் பிரேக் அடித்தார். அவர் பிரேக் போட்டத்தை பார்க்க முடியாத ஸ்விப்ட் டிசையர் கார் அதன் மீது மோதியது. அடுத்த 15 நிமிடங்களில் 18 கார்கள் மோதிக் கொண்டு குவியலாக கிடந்தன.
இந்த விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து ஜேவார் சுங்கச் சாவடி அருகே நடந்தது. அப்போது 2.5 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்கள் மட்டுமே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தால் யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் போக்குவரத்து 2 மணிநேரம் பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் 3 ஆம்புலன்ஸுகள், 3 கிரேன்கள் மற்றும் ஒரு தீயணைப்பு வண்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்களை அப்புறப்படுத்தியது. மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் செல்லும் பலர் வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அந்த பாதை திறந்ததில் இருந்து இதுவரை நடந்த 2 ஆயிரத்து 594 விபத்துகளில் 319 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications