மகராஷ்டிராவில் மின்னல் தாக்கி 2 பட்டாசு ஆலைகளின் மேற்கூரை இடிந்து 8 பேர் பலி, பலர் காயம்
மும்பை: மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கியதில் இரண்டு பட்டாசு தொழிற்சாலைகளின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பெண்கள், 1 குழந்தை உள்பட 8 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் மாவட்டம் தெர்கெடா கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் அந்த கிராமத்தில் உள்ள வெல்கம் மற்றும் பாரீஸ் ஆகிய பட்டாசு தொழிற்சாலைகளின் மேற்கூரைகள் வெடி சத்தத்துடன் இடிந்து விழுந்தன.
இதில் அந்த தொழிற்சாலைகளில் வேலை செய்த 5 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் இடிபாடிகளில் சிக்கி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கி பலியான 8 பேரின் உடல்களை மீட்டனர். மாவட்டத்தின் பிற பகுதிகளை தெர்கெடாவுடன் இணைக்கும் தெர்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு உடனே வர முடியாமல் போனது.
சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மவுலிவாக்கத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த போது 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.