டெல்லியில் பயங்கரம்... 81 வயது எஜமானியை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வேலைக்காரர் கைது
டெல்லி: 81 வயது எஜமானியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வேலைக்காரரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள தி கிரேட்டர் கைலாஷ் ஹோம் என்ற குடியிருப்பில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார் 81 வயது ரேகா துகாள். ஊடகத் துறையில் பணியாற்றிய இவரது கணவர் துகாள் கடந்த 2005ம் ஆண்டு காலமானார்.
அதனைத் தொடர்ந்து உதவிக்கு வேலைக்காரர்களை வைத்துக் கொண்டு தனிமையில் வசித்து வந்துள்ளார் ரேகா. கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் இவரது வீட்டில் வேலைக்காரராக சேர்ந்துள்ளார் நீரஜ் சகி என்ற 21 வயது இளைஞர்.
இந்நிலையில் கடந்த திங்களன்று மாலை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதில் ரேகா உயிரிழந்து விட்டதாகவும் அவரது மகளுக்கு தொலைபேசி வழியாக தெரிவித்துள்ளார் நீரஜ். மேலும், தீவிபத்து தொடர்பாக தீயணைப்புத் துறைக்கும் தகவலளித்துள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் படுக்கையறையில் பாதி எரிந்த நிலையில் கிடந்த ரேகாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதில், ரேகா மரணத்திற்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் நீரஜிடம் மீண்டும் தீவிர விசாரணை செய்துள்ளனர். முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிய நீரஜ் இறுதியில் ரேகாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தான் போலீசில் சிக்காமல் இருப்பதற்காக, தீ விபத்து நாடகம் ஆடியதையும் போலீசில் தெரிவித்துள்ளார் நீரஜ். அதனைத் தொடர்ந்து நீரஜை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர்.