8வது கட்ட லோக்சபா தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு: மே.வங்கம் டாப்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலின் 8ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம்தேதி தொடங்கி இம்மாதம் 12ம்தேதிவரை 9 கட்டங்களாக நடந்துவருகிறது.
தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் உட்பட பல தொகுதிகளில் இதுவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. ஆந்திராவிலுள்ள 25 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தின் 15 தொகுதிகள், பிகாரின் 7 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரின் 2 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தின் 4 தொகுதிகள், உத்தரகாண்டில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகள் என மொத்தம் 64 தொகுதிகளுக்கு இன்று புதன்கிழமை, 8ம்கட்டமாக தேர்தல் நடைபெற்றது..
அமேதி தொகுதியில் ராகுல்காந்தி, சுல்தான்பூரில் பாஜக சார்பில் வருண்காந்தி, கோண்டா தொகுதியில் பேனி பிரசாத் வர்மா ஆகியோர் உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளின் ஸ்டார் வேட்பாளர்களாகும். ஆந்திராவில் என்.டி.ராமாராவ் மகள் புரந்தேஷ்வரி ராஜம்பேட் தொகுதியில் முக்கிய வேட்பாளர். சீமாந்திா பகுதி சட்டசபை தேர்தலில் குப்பம் தொகுதியில் சந்திரபாபுநாயுடுவும், புலிவென்டுலா தொகுதியில் ஜெகன்மோகன் ரெட்டியும் ஸ்டார் வேட்பாளர்கள்.
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திர மாநிலத்திலுள்ள சீமாந்திரா மண்டலத்திலுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் ஜூன் 2ம்தேதி, சீமாந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட உள்ளதால் சீமாந்திரா சட்டசபைக்கு இது முதலாவது தேர்தல். பிகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 2 சட்டசபை தொகுதிகளுக்கும் , ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 1 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
பிற்பகல் 3 மணிவரை மேற்குவங்கத்தில் 73 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று பீகாரில் 47 சதவீதமும், ஹிமாச்சல் பிரதேசத்தில் 55 சதவீதமும், ஜம்மு காஸ்மீரில் 33 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 43 சதவீதம், உத்தரகாண்ட் 44 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
சீமாந்திராவில் பகல் 1 மணிவரை 51 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பகல் 1 மணி வரை 37 சதவீதம் வரை வாக்குகள் பதிவானது.
இதனிடையே ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளில் பாராமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்தார்.