போராட்டம் செய்து தலைவனாக பார்க்கிறாயா?.. பேஸ்புக்கில் நாள் குறித்து கொல்லப்பட்ட தலித் இளைஞர்
மத்திய பிரதேசத்தில் கோபி பரியா என்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர் உயர் சாதி இந்துக்களால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தில் கோபி பரியா என்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர் உயர் சாதி இந்துக்களால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இவரை கொலை செய்ய போகிறோம் என்று 2 நாள் முன்பு பேஸ்புக்கில் தகவல் கொடுத்துவிட்டு கொலை செய்து இருக்கிறார்கள்.
கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது.
இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இதில் எதிர்ப்பாராத விதமாக 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்று உயர்சாதியை சேர்ந்த சில விஷமிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யார் கோபி
தலித் சமூகத்தை சேர்ந்த கோபி பரியா, பகுஜன் சமாஜ் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். இவரது தந்தை தாராசந்த் அதே கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடு தழுவிய தலித் போராட்டத்தில் இவர் கலந்து கொண்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் சோபாபூர் பகுதியில் நடந்த போராட்டத்திற்கு இவர்தான் தலைமை தாங்கியுள்ளார்.

பட்டியல்
இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் மீது உயர்சாதி இந்துக்கள் கோபத்தில் இருந்துள்ளனர். இதில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய 83 தலித் இளைஞர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயர்களை உயர் சாதி இந்துக்கள் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு இதில் ஒவ்வொரு நபராக கொலை செய்ய இருக்கிறோம் என்று வெளிப்படையாக பேசியுள்ளனர்.

தப்பினார்கள்
இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்தும், போலீஸ் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து அந்த பட்டியலில் இருந்த நபர்கள் எல்லோரும் ஊரைவிட்டு வெவ்வேறு பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். சில பேஸ்புக் பக்கங்களில் இந்த 83 பேரின் புகைப்படமும் வீடியோவாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

செல்ல மறுப்பு
இந்த 83 பேர் பட்டியலில் முதலில் இருந்தது கோபி பரியா. இவர் மீதுதான் உயர்சாதி இந்துக்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஆனால் மற்ற நபர்களை போல கோபி ஊரைவிட்டு செல்ல விரும்பவில்லை. அங்கேயே சுற்றிக்கொண்டு அப்பாவின் கட்சிப்பணிகளை கவனித்து இருக்கிறார். மூன்று நாட்களாக எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்றுள்ளது.

நண்பர்களை அழைத்து சென்றார்கள்
இந்த நிலையில் உயர்சாதி சமூகத்தை சேர்ந்த மனோஜ் என்ற கோபியின் நண்பர் கோபியை போன் செய்து பேச வேண்டும் என்று கூறி மைதானத்திற்கு கூப்பிட்டு உள்ளார். அந்த இடத்தில் உயர்சாதியை சேர்ந்த ஆஷிஷ், கபில், கிரிதாரி ஆகிய நபர்கள் இருந்துள்ளனர். அந்த பேஸ்புக் போஸ்டை வெளியிட்ட நபர்களில் இவர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்தார்கள்
அந்த மைதானத்தில் வைத்து அவர்கள் கோபியை தாக்கி இருக்கிறார்கள். அதோடு ''நீ என்ன தலித் மக்களின் தலைவனாக பார்க்கிறாயா?'' என்று திட்டியுள்ளனர். அதன்பின் கோபி உடலில் மொத்தம் ஐந்து இடங்களில் சுட்டுவிட்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கோபி இந்த தகவலை போலீசுக்கு தெரிவித்துள்ளார்.

விசாரணை
கோபி சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார். தற்போது மனோஜ், ஆஷிஷ், கபில், கிரிதாரி ஆகியோரை போலீஸ் கைது செய்து இருக்கிறது. இப்போதுதான் அந்த பேஸ்புக் போஸ்ட் போட்ட மற்ற நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த தலித் போராட்டத்தை இந்துத்துவா இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் கலவரமாக மாற்றினார்கள் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications