திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையல் தோண்டும் பணிகள்... முன்னாள் அர்ச்சகர் புகாரால் பரபரப்பு
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையலுக்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றதாக முன்னாள் அர்ச்சகர் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையல் எடுப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றதாக முன்னாள் கோயில் அர்ச்சகர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ,விஷேச, விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருவது வழக்கம். இந்த கோயிலில் தினந்தோறும் அர்ச்சனைக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் மலர்களாலும் வாசனை திரவியத்தாலும் பூஜிப்பதை அறிந்த பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
அதுபோல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் மலையில் இருப்பதால் அங்கு கடும் குளிர் நிலவும். எனினும் வெங்கடாஜலபதியின் உடல் மிகவும் வெப்பமாகவும் அவரது மேல் சாத்தப்பட்ட பூக்களை நீக்கிவிட்டு பார்த்தால் அவருக்கு வியர்வை சுரப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
ஆச்சரியம்
திருப்பதியில் கோயிலில் உள்ள நகைகள் இன்னும் கணக்கில்லடங்காதவையாகவே உள்ளன என்றும் ஒரு தகவல் உலவுகிறது. இது போல் திருப்பதி என்றாலே அங்கு மர்மம், மெய்சிலிர்ப்பு, ஆச்சரியம் என்றாகிவிட்டது.
சுரங்கம்
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மீது முன்னாள் அர்ச்சகர் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டுவதாக புகார் அளித்தார்.
புனரமைப்பு பணி
இதை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. இது குறித்து தேவஸ்தான செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜு கூறுகையில், மடப்பள்ளியில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடக்கிறது.
தவறானது
மடப்பள்ளியில் பிரசாதம் செய்யும் போது அந்த வெப்பத்தை மடப்பள்ளியின் சுவர்கள் தாங்கக் கூடிய அளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. புதையல் தோண்டுவதற்கான முயற்சி நடந்தது என்பதெல்லாம் தவறு. அந்த பணிகளும் ஆகம ஆலோசகர்கள் அனுமதியுடன் நடைபெற்றது. அதுபோல் கோயிலில் நகைகள் காணாமல் போனதாக வந்த புகார்களும் தவறானது என்றார் ஸ்ரீனிவாச ராஜு.