இன்னொரு பாடி வரட்டும்.. மருத்துவ ஊழியர்களின் அலட்சியம்.. 10 கிமீ மகளின் சடலத்தை சுமந்து சென்ற தந்தை
சத்தீஸ்கர் மாநிலத்தில் காய்ச்சலால் அவதிப்பட்ட சிறுமி மரணம் அடைந்த நிலையில் ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படாததால் அவரது தந்தை சிறுமியின் சடலத்தை பத்து கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்ற அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள லகான்பூர் கிராமத்தில் சமூக சுகாதார மையம் உள்ளது.
ஆம்தாலா கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வர் தாஸ் என்பவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது 7 வயது மகள் சுரேகாவை லக்கன்பூர் சமூக நல மையத்துக்கு அதிகாலையில் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்.

7 வயது சிறுமி
கடுமையான காய்ச்சலால் சிறுமியின் ஆக்சிஜன் அளவு சுமார் 60 என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது கடந்த சில நாட்களாக அவர் கடும் காய்ச்சலால் அவதிப்பட்டதாக அவரது பெற்றோர்கள் தெரிவித்தனர். தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவரது உடல்நிலை மோசமடைந்து காலை 7:30 மணியளவில் இறந்துவிட்டார். அப்போது அவரது உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் உதவியை ஈஸ்வர் தாஸ் கேட்டுள்ளார். அதற்கு ஒரு சடலத்துக்கு ஆம்புலன்ஸ் வசதி தர முடியாது எனவும், இன்னொரு சடலம் வரும் காத்திருக்குமாறு மருத்துவமனை பணியாளர்கள் கூறியுள்ளனர்.

காய்ச்சலில் பலி
சுமார் 2 மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் வேறு வழியின்றி தனது மகளின் உடலை தோளில் சுமந்தவாறு ஈஸ்வர் தாஸ், நடந்தே சென்றார். அவர் சென்ற பிறகு காலை சுமார் 9:20 மணியளவிலேயே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அவர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று வீட்டை அடைந்தார். இந்நிலையில் மகளின் உடலை சுமந்து தந்தை சாலையில் செல்லும் பரிதாப காட்சியை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். ஈஸ்வர் தாஸ் கண்ணீருடன் நடந்து செல்வதை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

சடலத்தை சுமந்த தந்தை
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் இருந்த சுகாதார அமைச்சர் டிஎஸ் சிங் தியோ, மாவட்டத்தின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரியிடம் இந்த விஷயத்தை விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அம்பிகாபூர் தொகுதி சுகாதார துறை அமைச்சர் டிஎஸ் சிங் தியோலின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் அதிர்ச்சி
"வீடியோவை பார்த்தேன். கவலையாக இருந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். அங்கு பணியமர்த்தப்பட்டும் பணியை செய்ய முடியாதவர்களை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்" என்று அமைச்சர் கூறினார். மேலும், "பணியில் இருந்த சுகாதார ஊழியர்கள் வாகனத்திற்காக காத்திருக்க குடும்பத்தை வற்புறுத்தியிருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்," என்றும் அமைச்சர் டிஎஸ் சிங் தியோ கூறினார்.












Click it and Unblock the Notifications