கியூபாவில் பயங்கரம்.. ஒரே ஒரு "பவர் புல்" மின்னல்தான்.. பற்றி எரிந்த எண்ணெய் கிடங்கு.. பரபர சம்பவம்
ஹவானா: கியூபாவில் மின்னல் தாக்கியதால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த 121 பேர் படுகாயம் அடைந்தனர். 17 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.
கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள கம்யூனிச நாடு கியூபா. இந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மடான்ஸ் மாகாணத்தில் எண்ணெய் கிடங்குகள் அமைந்துள்ளன.
அங்கு அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை எண்ணெய் கிடங்கு மீது மின்னல் தாக்கியது.
பரபரப்பு! அடுத்தடுத்து தீப்பற்றி எரியும் இ-பைக்குகள்! மாதவரத்தில் நடுரோட்டில் எரிந்த எலக்ட்ரிக் பைக்
பற்றி எரிந்த எண்ணெய் கிடங்கு
இதில், எண்ணெய் கிடங்கு பற்றி எரிந்தது. 26 ஆயிரம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட எண்ணெய் பேரலில் மின்னல் தாக்கியதால், தீ பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளித்தது. எண்ணெய் கிடங்கின் ஒரு பேரலில் பற்றிய தீ அப்படியே அருகில் இருந்த மற்றொரு பேரலுக்கும் பரவியது. அதில் சுமார் 50 ஆயிரம் கன மீட்டர் கொள்ளளவு எண்ணெய் இருந்ததால், தீ மள மளவென கொழுந்து விட்டு எரிந்தது. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் 17 பேர் மாயம்
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தீயை அணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீயில் சிக்கி ஒருவர் பலியானார். 121 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தீயணைப்பு வீரர்கள் 17 பேர் மாயமாகியுள்ளனர். இதனால், அவர்களின் கதி என்ன என்றும் தெரியவில்லை. மாயமான வீரர்களை மீட்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
உதவுமாறு வெளிநாடுகளுக்கு அழைப்பு
காயம் அடைந்தவர்களின் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க்குமென்று அஞ்சப்படுகிறது. காயம் அடைந்தவர்களில் எரிசக்தி துறை அமைச்சர் லிவன் அர்ரோண்டேவும் அடங்குவார். எண்ணெய் கிடங்கில் தீ பற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய சென்ற போது தீக்காயத்தில் சிக்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எண்ணெய் கிடங்கில் பற்றிய தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிகிறது. இதனால், தீயை அணைக்க தொழில்நுட்ப உதவிகள் அளித்து உதவ முன்வருமாறு நட்பு நாடுகளுக்கு கியூபா அழைப்பு விடுத்துள்ளது.
கியூபா தலைவர்கள் நன்றி
கியூபாவின் கோரிக்கையை ஏற்று மெக்சிகோ, வெனிசூலா, ரஷ்யா, நிகரகுவா, அர்ஜென்டினா மற்றும் சிலி ஆகிய நாடுகள் தொழில்நுட்ப கருவிகளை அளித்து உதவின. இதையடுத்து, கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் உதவி அளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல், எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த போதுமான உதவிகள் செய்யப்படும் என்று ஹவானாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்ட கியூபா மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்து உள்ள நிலையில், அவசரகாலத்திற்கு உதவிக்கரம் நீட்டியதற்கு கியூபா தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வானம் முழுவதும் புகைமூட்டம்
ஒரு லட்சத்து 40 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட மடான்ஸ் நகரம் முழுவதும் எண்ணெய் கிடங்கில் தீ பற்றியதன் தாக்கம் தென்பட்டது. வானம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. மக்களுக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. வெடிகுண்டு வெடித்தது போல அதிகாலை நேரங்களில் சத்தம் கேட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். மக்கள் மத்தியில் ஒரு வித பீதியும் நிலவிவருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
எப்படி தீ பிடித்தது?
எண்ணெய் கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க மேலும் சில நாட்கள் ஆகக்கூடும் என்றும் கியூபாவில் இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எண்ணெய் கிடங்கில் நிறுவப்பட்டு இருந்த மின்னல் கம்பி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து கியூபாவுக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.