மாயமான மலேசிய விமானத்துக்கு என்னதான் நடந்திருக்கும்? வல்லுநர்கள் சொல்வது என்ன?
டெல்லி: 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்துக்கு என்னதான் நடந்திருக்கும்? அது தீவிரவாதிகளால் வெடித்து சிதறடிக்கப்படதா? கடலில் மூழ்கடிக்கப்பட்டதா? என்பது குறித்த விடை இன்னமும் கிடைத்தபாடில்லை..
239 பயணிகளுடன் மலேசிய விமானம் மாயமாகிப் போனதைத் தொடர்ந்து அப்பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வான்பரப்பும் கடற்பரப்பும் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இன்னமும் அந்த விமானத்துக்கு என்னதான் நடந்தது என்பது பற்றி எந்த ஒரு தகவலுமே இல்லை.

மலேசியாவும் சீனாவும் இந்த விமான விபத்து குறித்து மல்லுக் கட்டிக் கொண்டிருக்கின்றன. மலேசியாவோ, 2009ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்த ஏர் பிரான்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்க 5 நாள் ஆனது. 2007ஆம் ஆண்டு மகாசார் ஜலசந்தியில் விழுந்த ஆடம் ஏரின் விமானத்தைக் கண்டுபிடிக்க 7 நாளானது என்று வசனம் பேசிக் கொண்டிருக்கிறது.
அத்துடன் மாயமான விமானம் குறித்து அத்தனை தகவல்களையும் எப்படி வழங்குவது என்றும் கேள்வி எழுப்பி பீதி கிளப்புகிறார் மலேசிய அமைச்சர் அப்துல் ரஹிம் பக்ரி. இந்நிலையில் மாயமான விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து கேப்டன் எஸ்.எஸ். பானேசர் கருத்து தெரிவிக்கையில், மாயமான மலேசிய விமானத்தை தீவிரவாதிகள் கடத்தி திட்டமிட்டு தகர்த்திருக்கலாம் அல்லது செயற்கைக் கோளின் பாகங்கள் ஏதேனும் மோதி பெரும் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்.
மேலும் விமானத்தின் காக்பிட்டில் ஏதாவது அவசரம் எனில் 7700 என்ற குறியீட்டு அலைவரிசையை அழுத்தினால் 200 மைல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுமே உடனே உஷார்படுத்தப்படும். அப்போது அந்த விமானம் எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது? அதன் வேகம்? செல்லும் திசை அனைத்துமே கண்காணிக்கப்படும். அதே நேரத்தில் விமானத்தை கடத்திய கடத்தல்காரர்கள் அந்த அவசர அலைவரிசை எண் டிரான்ஸ்பாண்டரை திட்டமிட்டு நிறுத்தினால் விமானம் எந்த திசையில் பறக்கிறது என்ற தகவல் மட்டுமே கிடைக்குமே தவிர அதன் வேகம், எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது என்ற விவரம் கீழே உள்ள விமான நிலையங்களுக்குத் தெரியாமல் போய்விடும்.
ஒருவேளை வானில் பறந்து கொண்டிருந்த போது அதாவது 29 ஆயிரம் அடி முதல் 60 ஆயிரம் அடி வரை பறந்து கொண்டிருக்கும் போது அதன் மீது ஏதேனும் மோதி விபத்துக்குள்ளானால் ராடாரில் அது மாயமான இடம் தெரியவரும்.
ஒருவேளை அது வெடித்து சிதறியிருந்தால் 5 நாட்களாகியுமா அதன் பாகங்கள் கிடைக்காமல் போயிருக்கும்? என்ற கேள்வியும் எழுகிறது. மிக அதிக உயரத்தில் பறக்க வைத்து வெடிக்கச் செய்திருந்தால் அதன் பாகங்கள், உடல்கள் கடலில் ஏதேனும் ஒரு பகுதியில் விழுந்திருக்கலாம். அதை உலக நாடுகளின் கடற்படை வீரர்கள் கண்டுபிடிக்க முடியும் என்றாலும் மிகுந்த செலவுக்குரிய விஷயமாகிவிடும் என்கிறார் பானேசர்.












Click it and Unblock the Notifications