கழிவறையில் அடித்துக்கொண்ட மாணவர்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் கைது!
டெல்லியில் பள்ளி மாணவர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: பள்ளி கழிவறையில் மாணவர்கள் சண்டை போட்டுக்கொண்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் பள்ளி மாணவர்கள் கொலை செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் ஏழு வயது பள்ளி மாணவன் கொடூராமாக கொலை செய்யப்பட்டான்.
இதைத்தொடர்ந்து பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டன. அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மாணவர் மர்ம மரணம்
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு பள்ளியில் 14 வயது மாணவர் மர்மமான முறையில் உயிரிழ்ந்துள்ளார். டெல்லியின் கஜூரி காஸ் நகரில் உள்ள ஜீவன் ஜோதி பள்ளிக்கூடத்தில் 14 வயதுடைய மாணவர் நேற்று பள்ளிக்கூட கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உயிரிழந்த மாணவன்
இதனையடுத்து அச்சிறுவனை உடனடியாக மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
கழிவறையில் நடந்த சண்டை
இதுதொடர்பாக பெற்றோர்களின் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது உயிரிழந்த மாணவன் உட்பட 5 மாணவர்கள் கழிவறையில் சண்டை போட்டுக் கொண்டது கழிவறையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.
3 பேர் கைது
இதனையடுத்து 304ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்ததை 302ன் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.