சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் குத்தியதாக குற்றம்சாட்டப்படும் இளைஞர் தாமும் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவருகிறது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன?
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் லேப் டெக்னீசியன் படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று ஸ்வேதா படித்துவந்த கல்லூரிக்கு அருகில் அவரும் அவருக்கு அறிமுகமான இளைஞர் ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் கழுத்தில் குத்தினார். இதற்குப் பிறகு அவரும் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார் என போலீசுக்குக் கிடைத்த ஆரம்பகட்டத் தகவல்கள் கூறுகின்றன.
இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கும் ஆம்புலன்சிற்கும் தகவல் அளித்தனர். இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஸ்வேதா உயிரிழந்தார்.
- பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற சிறுமி மீது வழக்கு இல்லை
- என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் மனைவி கொடூர கொலை - 3 சிறார்கள் உள்பட நால்வர் கைது
கத்தியால் குத்திய ராமசந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் திருக்குவளை பகுதியைச் சேர்ந்தவர். இது குறித்து சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சக மாணவியுடன் வந்த ஸ்வேதா
இன்று மதியம் 2 மணியளவில் ஸ்வேதாவை பார்ப்பதற்காக ராம்குமார் என்பவர் கல்லூரி அருகில் வந்துள்ளார். இருவரும் தாம்பரம் ரயில் நிலையம் அருகில் பேசிக் கொண்டிருந்தனர். எதாவது நடக்கலாம்?' என்பதை முன்கூட்டியே யூகித்த ஸ்வேதா, தனது பாதுகாப்புக்காக சக கல்லூரி மாணவி ஒருவரையும் அழைத்து வந்துள்ளார்.
ரயில் நிலையம் அருகில் ஸ்வேதாவும் ராம்குமாரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தில் ராம்குமார் குத்தியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சக மாணவி சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவத்தில் மாணவி ஸ்வேதா சம்பவ இடத்திலேயே விழுந்துவிட்டார். மாணவியை குத்திய கையோடு அந்த இளைஞரும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துள்ளார். பொதுமக்களில் சிலர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், ஸ்வேதாவையும் ராம்குமாரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு ராம்குமாருக்கு 9 தையல்கள் போடப்பட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, ஸ்வேதாவின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் குரோம்பேட்டை மருத்துவமனையில் மகளின் சடலத்தைப் பார்த்து கதறிய காட்சிகள் கலங்க வைத்தன. ராம்குமார் சென்னை மறைமலை நகர் பகுதியில் தங்கியிருந்தார் எனத் தெரியவந்துள்ளது. கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிற செய்திகள்:
- உங்கள் உணவு ஊட்டச்சத்து மிக்கதா என அறிவது எப்படி?
- 'நினைத்ததைவிட மோசம்' - காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை
- ஐநாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ உரை - முக்கிய விவரங்கள் இதோ
- DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்















Click it and Unblock the Notifications