காற்றில் பறந்த வாக்குறுதிகள்.. பறிக்கப்பட்ட மக்கள் நிம்மதி.. 4 ஆண்டுகால மோடி அரசின் நிஜமுகம்!
4 ஆண்டுகால மோடி அரசால் மக்கள் பட்டபாட்டை விவரிக்கிறது இந்த செய்தி.
Recommended Video

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு 4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்திருக்கிறது. மக்களுக்கான அரசாக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமேயான அரசாகத்தான் 4 ஆண்டுகாலத்தை நிறைவு செய்திருக்கிறார் பிரதமர் மோடி.
2014 லோக்சபா தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட போது பிரசார களத்தில் வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டன. ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம்; ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ15 லட்சத்தை செலுத்துவோம் என பில்டப் கொடுத்தார் மோடி.
இப்போதும் மக்கள் கேட்கிறார் எங்கே அந்த ரூ15 லட்சம்? எங்கே அந்த கருப்பு பணம்? என்று. கருப்பு பண மீட்பு விவகாரத்தில் எந்த ஒரு முன்னேற்றத்தையும் காட்டவில்லை மோடி அரசு.

வேலை வாய்ப்பை பறித்த மோடி அரசு
அதேபோல ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார். ஆனால் கருப்பு பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு என்கிற ஒன்றை அறிவித்து நாட்டின் சிறு குறு தொழில்களை நாசமாக்கி இருந்த வேலைவாய்ப்புகளையும் பறித்து போட்டது மோடி அரசு. அதன் பின்னர் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்தி தொழில் நிறுவனங்களுக்கு மிக மோசமான நெருக்கடியை உருவாக்கி வைத்திருக்கிறது மோடியின் அரசு.

நாசகார பணமதிப்பிழப்பு திட்டம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக ஒரேநாளில் அத்தனை கோடி மக்களும் வீதிக்கு வர நேரிட்டது. ஒவ்வொரு நாளும் பணத்தை எடுக்க வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் உயிரைவிட்ட அப்பாவிகளின் சாபம் மோடி அரசை சும்மாவிடாது.

குறைந்தபட்ச விலை
ஊழலை ஒழிக்க லோக்பாலை கொண்டு வருவோம் என வீரவசனம் பேசியதும் மோடிதான். அதேபோல் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்போம் என்றதும் மோடிதான். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 4 ஆண்டுகாலத்தை கடத்திவிட்டார் பிரதமர் மோடி.

தலைவிரித்தாடும் ஊழல்
ஊழலை ஒழிப்போம் என முழக்கமிட்டவர் மோடி. ஆனால் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதையே மோடி அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை.

மேக் இன் இந்தியா தோல்வி
மேக் இன் இந்தியா திட்டத்தை அறிவித்தது மோடி அரசு. ஆனால் மோடி அரசின் மீதான நம்பகத் தன்மை இல்லாததால் இது தோல்வியில்தான் முடிவடைந்தது.

உச்சகட்ட அரசியல் தலையீடு
நாட்டின் அத்தனை அரசியல் சாசன அமைப்புகளையும் மோடி அரசு தனக்கு சாதகமான அமைப்பாக செயல்படுவதற்கு நெருக்கடிகளை திணித்தது. இதன் உச்சகட்டமாகத்தான் இந்திய வரலாற்றிலேயே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினர்.

தீர்ப்புகளை மதிக்காத மோடி அரசு
அருணாச்சல பிரதேசத்திலும் ஹரியானாவிலும் தான்தோன்றித் தனமாக ஆட்சிகளை கலைத்து அவமானப்பட்டுக் கொண்டது மோடி அரசு. காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்தாமல் தமிழர்களின் முதுகில் குத்தி மகிழ்ந்து கொண்டது மோடி அரசு.

வங்கி கொள்ளையர்களுக்கு உதவி
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி எந்த ஒரு வளர்ச்சியையும் அடையவில்லை. மாறாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்பது பின்னடைவையே சந்தித்தது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அப்படி ஒரு முனைப்புடன் செயல்படுகிறது மோடி அரசு. விஜய் மல்லையா, நீரவ் மோடி என வங்கிகளில் பொதுமக்களின் பணத்தை பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கொள்ளையர்கள் நாட்டை விட்டு தப்பி ஓட உதவியதும் மோடி அரசு.

மாட்டிறைச்சி குண்டர்கள்
மாட்டிறைச்சியை தடுப்போம் என்கிற பசு குண்டர்களின் தாக்குதல்களில் அப்பாவிகள் மரணித்துப் போயினர். இதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மவுனியாகத்தான் இருந்தது மோடி அரசு.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
நாட்டையே கிடுகிடுக்க வைத்தது தமிழக விவசாயிகளின் டெல்லி போராட்டம். ஈவு இரக்கமே இல்லாமல் சற்றும் திரும்பிப் பார்க்காமல் கண்டுகொள்ளாமல் இருந்ததும் மோடி அரசுதான்.

குப்பையில் தமிழக மசோதா
நாசகார நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதைப்பற்றி கவலைப்படாமல் குப்பை தொட்டியில் வீசியது.

ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி
ஆளுநர்கள் மூலமாக மாநிலங்களின் ஆட்சி நிர்வாகத்தில் தலையிட வைத்து இரட்டை ஆட்சி முறையை அமல்படுத்தியதும் மோடி அரசுதான். இந்த 4 ஆண்டுகால மோடி அரசு சாதித்தவைகளை விட மக்கள் சந்தித்த சோதனைகளும் வேதனைகளும் சொல்லி மாளாதது.












Click it and Unblock the Notifications