தப்பான ஒரு பாட்டுக்காக கொலை.. ஊரை காலி செய்த 200 முஸ்லீம்கள்..ராஜஸ்தானில் கொடுமை!
ஜெய்ப்பூரில் ஒரு முஸ்லீம் பாடகரின் பாடலில் ஏற்பட்ட பிழையால் அவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து 200 முஸ்லிம்கள் அந்தக் கிராமத்தைக் காலி செய்தனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அஹமத் கான் என்ற முஸ்லீம் ஒருவர் பாடிய பாடலில் ஏற்பட்ட பிழையால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
இதையடுத்து ஜெய்ப்பூரில் அவர் கொல்லப்பட்ட தண்டல் என்ற கிராமம் முழுக்க கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் நிறைய முஸ்லீம்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு தேடி அந்தக் கிராமத்தை விட்டு 200 முஸ்லீம்கள் வெளியேறியுள்ளனர். ஒரு பாடல் வரியில் ஏற்பட்ட தவறால் நடந்த கொலையும், அதையடுத்த நடந்த கலவரமும் அங்கு உள்ள மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்து பாடலை பாடும் முஸ்லீம்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை அடுத்து இருக்கிறது தண்டல் என்ற கிராமம். இந்தக் கிராமம் இயல்பாகவே வறுமையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கிராமம் பாகிஸ்தானின் எல்லை ஓரத்தில் இருப்பதால் அடிக்கடி கலவரம் ஏற்படும் இடமாகவும் இருக்கிறது. இங்கு இந்து தெய்வங்களின் பாடல்களைப் பாடும் முஸ்லீம் குழுக்கள் பல இருக்கின்றன. அதில் ஒரு குழுவில் முக்கிய பாடகராக இருந்தவர் தான் அஹமது கான்.
பாடலில் ஏற்பட்ட பிழை
45 வயது நிரம்பிய இந்த அஹமது கான் மிகச்சிறந்த பாடகர் ஆவர். இவர் இந்து பாடல்கள் பலவற்றை இதுவரை பாடியுள்ளார். இந்த நிலையில் அவர் பாடிய ஒரு பாடலில் சில பிழைகள் இருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து மத பூசாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அதோடு அவர் நிற்காமல் தன்னையுடைய நண்பர்கள் சிலரையும் கூட்டி வந்து அஹமது கானை கொடுரமாக தாக்கியுள்ளார்.
அஹமது கான் கொல்லப்பட்டார்
கொடூரமாக தாக்கப்பட்ட அஹமது கான் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் உடலில் காயங்கள் நிறைய இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே மரணமடைந்தார். இதையடுத்து பூசாரி ரமேஷ் சுதார் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டதை அடுத்து தண்டல் கிராமத்தில் கலவரம் வெடிக்க ஆரம்பித்தது. ஆனால் இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதி என்பதால் முஸ்லீம்களே தொடர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். அந்தப் பகுதியில் இருந்த பெரும்பாலான முஸ்லிங்கள் இதனால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர்.
ஊரைக் காலி செய்த 200 பேர்
இதையடுத்து இந்தக் கிராமத்தில் இருக்கும் முஸ்லீம்கள் பாதுகாப்பு கருதி , அந்த கிராமத்தை விட்டே வெளியேறும் முடிவை எடுத்தனர். இதுவரை மட்டுமே 200 பேர் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கிராமத்தை சேர்ந்த சுக்கா கான் பேசிய போது ''நாங்கள் தாக்கப்படுகிறோம். எங்களது உடமைகள் சூறையாடப்படுகின்றது, எங்களுக்கு உயிர்தான் முக்கியம். இப்போதைக்கு இந்த கிராமத்திற்கு திரும்பி வரமாட்டோம்'' என்றார். இந்த சம்பவத்தில் விரைவில் அமைதி காணப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.