விடிய விடிய நடந்த தேடுதல் வேட்டை.. என்கவுன்ட்டரில் தீவிரவாதி சுட்டுக்கொலை.. ஜம்மு காஷ்மீரில் ஷாக்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் காவல்துறையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதிலிருந்து, பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் பணியில் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சோபியான் பகுதியில் திடீர் ரெய்டு மேற்கொள்ளப்பட்டது. கத்தோஹாலன் பகுதியில் தீவிரவாதி ஒருவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் அவரிடமிருந்து துப்பாக்கிகள் போன்ற பயங்கர ஆயுதங்களும், வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பிவிட்டது, மக்கள் இயல்பு நிலைக்கு வந்துவிட்டனர் என மத்திய அரசு தரப்பில் தொடர்ச்சியாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்திய என்கவுன்ட்டர்கள், போலீசாரின் கூடுதல் கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது போன்றவற்றை சுட்டிக்காட்டி மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications