மனிதரை அடித்துக்கொன்ற புலி! ஒரே மாதத்தில் இரண்டாவது பலி.. புலிகள் சரணாலயத்தில் அடுத்தடுத்து ஷாக்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயத்தில் ஊழியர் ஒருவரை புலி ஒன்று தாக்கி கொன்றிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜிம் கார்பெட் புலிகள் சரணாலயம்தான் நாட்டின் முதல் தேசிய பூங்காவாகும். புலி, சிறுத்தை உள்ளிட்ட பூனை இனங்களை பாதுகாக்க இமயமலை அடிவாரத்தில் சுமார் 920.9 ச.கி.மீ பரப்பளவில் இந்த பூங்கா கடந்த 1939ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இங்கு புலிகளை தவிர மான்கள், யானைகள், கரடி போன்ற உயிரினங்களும் இருக்கின்றன.

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15 முதல் ஜூன் 15வரை பூங்கா திறந்திருக்கும். புலிகளை பார்க்க விருப்பப்படும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் இங்கு இந்த காலத்தில் வருவார்கள். இப்படி இருக்கையில் இன்று சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த சரணாலய ஊழியர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "இந்த சரணாலயம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று அடர் வனம், இரண்டாவது ஆறு, மூன்றாவதாக இருக்கும் அடர்த்தி குறைவான பகுதியில்தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பகுதியில் பணி செய்து வந்த நேபாளத்தை சேர்ந்த நபர் சில நாட்களுக்கு முன்னர் இதேபோல புலி தாக்கி உயிரிழந்தார். அப்போதே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இன்று இன்னொரு உயிர் பலியாகி இருக்காது.
இன்று யானை மீது சவாரி செய்து புலி பார்க்க பயணிகள் சென்றனர். இது வழக்கமான நிகழ்வுதான். இப்படி இருக்கையில் திடீரெ புலி ஒன்று சரணாலய ஊழியரை தாக்கி கொன்றிருக்கிறது. மட்டுமல்லாது அவரது உடலையும் வனப்பகுதிக்குள் இழுத்து சென்றிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஆண் புலி என்பது மட்டும்தான் எங்களுக்கு தெரியும்" என்று கூறியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் கூறுகையில், "நாங்கள் சம்பந்தப்பட்ட புலியை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நேபாளத்தை சேர்ந்தவரை கொன்றதும், தற்போது சரணாலய ஊழியரை கொன்றதும் ஒரே புலிதானா? என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. அப்படி இருந்தால் அது மனிதர்களை கொல்லும் புலியாக மாறியிருக்க வாய்ப்பிருக்கிறது. வயதான அல்லது வேட்டையாட முடியாத அளவுக்கு காயம் பட்ட புலிகள்தான் இப்படி மனிதர்களை கொல்லும். எனவே நாங்கள் புலியை தொடர்ந்து கண்காணித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்" என கூறியுள்ளனர்.
அதேபோல பூங்காவை தற்காலிகமாக மூடவும் வனத்துறையினர் யோசித்து வருகிறார்கள். எப்படி இருப்பினும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்யாமல் பூங்காவை திறப்பது ஆபத்தில்தான் முடியும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். ஒரே மாதத்தில் 2 பேரை புலி ஒன்று கொன்றிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications