மணிப்பூர் பயங்கரம்.. பள்ளிக்கு வெளியே பெண் சுட்டுப் படுகொலை- இணைய சேவை தடை தொடர்ந்து நீட்டிப்பு!
இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைகளுக்கு இடையே பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில் 175 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60,000க்கும் அதிகமானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறையானது மைத்தேயி, குக்கி இனக்குழுக்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தி உள்ளது. குக்கி இனக்குழுவினர் மட்டுமே வசிக்கும் பகுதியில் சுயாட்சி கவுன்சில் நிர்வாகம் கோரி அடுத்த கட்டமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஆயுதம் தாங்கிய குக்கி கிராம காவல்படையினரும் இணைந்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில் மணிப்பூரில் பள்ளிக் கூடங்கள் 2 மாதங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டன. பெரும் அச்சத்துடன் பள்ளிக் கூடங்கள் திறக்கப்பட்டன. ஆனால் இம்பால் மேற்கு பகுதியில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே பெண் ஒருவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இம்பால் மேற்கு பகுதியில் Shishu Nishtha நிகேதன் பள்ளிக்கு வெளியே இச்சம்பவம் நிகழ்ந்தது.
இருதரப்பு துப்பாக்கிச் சண்டையில் அப்பெண் சிக்கியதாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கங்போக்பி மாவட்டத்தில் இரு இனக்குழுவினரிடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மற்றொரு இடத்தில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவின் வீரர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு தீ வைக்கப்பட்டது.
இதனிடையே மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக அமலில் இருக்கும் இணைய சேவைகளுக்கான தடை மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் பரவாமல் தடுக்க ஜூலை 10-ந் தேதி வரை இணையசேவைகள் இணைப்புக்கான தடை அமலில் இருக்கும் என்றும் மணிப்பூர் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை வெளியான தகவல்களை மிக மோசமாக இருக்கிறது; ஆகையால் இணையசேவை தடையை நீக்க வேண்டும் என்று பல்வேறு மனித உரிமைகள் அமைப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் இணையத் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications