கர்நாடகா முதல்வர் குமாரசாமி பற்றி இன்ஸ்டாகிராமில் அவதூறு... இளைஞர் கைது
கர்நாடகா முதல்வர் குமாரசாமியைப் பற்றி இன்ஸ்டாகிராமில் அவதூறு போட்டோ போட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மங்களூரு: கர்நாடகா முதல்வர் குமாரசாமியைப் பற்றி அவதுறாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞரை மங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர்.
மங்களூருவைச் சேர்ந்த பிரசாந்த் பூஜாரி (24) என்ற இளைஞர் கர்நாடகா முதல்வர் குமாரசாமியைப் பற்றி அவதூறு செய்யும் விதத்தில் இன்ஸ்டாகிராமில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த போட்டோ, முதல்வர் குமாரசாமியை அவதூறு செய்வதோடு, கர்நாடகாவில் இரு சமூகங்களுக்கிடையில் விரோதத்தை உருவாக்கும் வகையில் உள்ளது என்று புகார் அளிக்கப்பட்டது.
பிரசாந்த் பூஜாரி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மங்களூரு கிழக்கு போலீஸார் அந்த அவதூறு பரபரப்பும் போட்டோ தொடர்பாக விசாரித்து வந்தனர். இந்நிலையில், மத்திய குற்றப் பிரிவு போலீஸார் மங்களூரு பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் பூஜாரியை கைது செய்துள்ளனர்.
முதல்வர் குமாரசாமியை அவதூறு செய்து போட்டோ பதிவு பற்றி போலீஸார் கூறுகையில் அந்த போட்டோ இரு சமூகங்களுக்கிடையே உணர்ச்சியை காயப்படுத்தும்படியாக உள்ளது. மேலும், அந்த போட்டோ காவல் துறை சட்டம் ஒழுங்கை பாதிக்கும் விதமாக உள்ளது.
அதனால், பிரசாந்த் பூஜாரி மீது மத அடிப்படையில் இருவேறு சமூகக் குழுக்களுக்கிடையே மோதலை உருவாக்குவது, தவறான கருத்துகளை பரப்புவதன் மூலம் அமைதியைக் குலைப்பது போன்ற குற்றங்களுக்காக இந்திய தண்டனை சட்டம் 153 ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.