ஆடி மாத பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி!
பம்பை: ஆடி மாத பூஜைகளுக்காக சபமரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 21-ந் தேதி வரை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர்.
ஆடி அமாவாசை நாளான 17-ந் தேதியன்று நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது இந்துக்கள் வழக்கம். ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் ஆடி அமாவாசை நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர். இதனால் ராமேஸ்ரவம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவிலும் அனைத்து நீர்நிலை உள்ள பகுதிகளில் தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப்படும். மேலும் ஆடி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும். பொதுவாக மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவில் நீண்டகாலம் திறக்கப்படும். இதர மாதங்களில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
சபரிமலையில் இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி ஐயப்பன் கோவில் நடையை திறந்து, தீபாரதனை செய்வார். நாளை முதல் 5 நாட்களுக்கு பக்தர்கள் 18-ம் படி வழியாக ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடும் சபரிமலையில் செய்யப்பட்டுள்ளன. வரும் 21-ந் தேதி இரவு 10 மணிக்குப் பின்னர் ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படும்.
இதனைத் தொடர்ந்து ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு அடுத்த மாதம் ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications