ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்களிடமிருந்து 5 லட்சம் பதில்கள்: ஆம் ஆத்மி
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து மக்களிடம் இருந்து இதுவரை 5 லட்சம் பதில்கள் தங்களுக்கு வந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலில் 31 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. 2வது இடத்தை பிடித்த ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 36 எம்.எல்.ஏ.க்களை எந்தக் கட்சியும் பெறாததால் அங்கு இழுபறி நீட்டிக்கிறது. ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் இல்லாததால் எதிர்கட்சி வரிசையில் அமரப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு, டெல்லி துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆட்சி அமைக்க முதலில் மறுப்பு தெரிவித்திருந்த ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால், தற்போது மக்கள் கருத்தை கேட்கப் போவதாக அறிவித்தார்.
இதற்காக 25 லட்சம் கடிதங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தங்களின் இந்த நடவடிக்கைக்கு மக்களிடமிருந்து நல்ல பதில்கள் கிடைக்கத் துவங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. எஸ்.எம்.எஸ், இணையதளம், தொலைபேசி மற்றும் கடிதம் மூலமாக நேற்று வரை 5,25,000 பதில்கள் வந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications