ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தால் பரிசீலிப்பேன்... அமீர்கான்
மும்பை: தனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்தால் அதுபற்றி பரிசீலிக்க தயார் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் அமீர்கான்.
பிரபல பாலிவுட் நடிகரான 49 வயது அமீர்கான் மும்பையில் இந்தியா டுடே குழுமம் சார்பில் நடத்தப்பட்ட ‘பஞ்சாயத்து ஆஜ் தக்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அமீர்கான். அப்போது அவர் கூறியதாவது :-
என் நண்பர்கள்...
கேள்வி: கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகை ரேகா ஆகியோரை போன்று உங்களுக்கும் ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுத்தால் ஏற்பீர்களா?
அமீர்கான்: அவர்களின் நடவடிக்கைகள் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. ஏனெனில், சச்சின் தெண்டுல்கரும், ரேகாவும் எனக்கு நல்ல நண்பர்கள்.
பரிசீலிப்பேன்...
ஆனால், ராஜ்யசபா எம்.பி. ஆவதற்கான வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டால், அதுபற்றி பரிசீலிப்பேன். இது சாத்தியமானால், எல்லா நாட்களிலும் நான் நாடாளுமன்றத்தில் ஆஜராவேன்.
மோடி குறித்து...
கேள்வி: அதிகாரத்தை மையப்படுத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சி குறித்து உங்கள் கருத்து ?
அமீர்கான்: மோடி நல்லது தான் செய்கிறாரா என்பது எனக்கு தெரியாது. இந்த விஷயத்தில் என்னை விட உங்களுக்கு நன்கு தெரியும்.
இந்திப் படங்களில் பெண்கள்...
கேள்வி: இந்தி படங்களில் பெண்களை சித்தரிப்பது குறித்து உங்கள் கருத்து ?
அமீர்கான்: இந்தி படங்கள் பொறுப்பற்ற முறையில் பெண்களை சித்தரிக்கின்றன என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். பெண்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என இவ்வாறு அவர் தெரிவித்தார்.