டெல்லி: 20 கல்லூரி உட்பட 5 வாக்குறுதிகளை முன்வைத்து சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் குதித்த ஆம் ஆத்மி!
டெல்லி: சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் டெல்லியில் 20 கல்லூரிகள் அமைக்கப்படும் என்பது உட்பட 5 வாக்குறுதிகளை அக்கட்சி முன்வைத்து பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை, பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கும் கிடைக்கவில்லை.
சட்டசபையில் தனிப்பெரும் கட்சியான பாஜக ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வரானார். ஆனால் 2 மாதம் கூட அவரது அரசு நீடிக்க முடியாமல் ராஜினாமா செய்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டது. நீண்டகாலம் ஜனாதிபதி ஆட்சி நீடித்து வந்த நிலையில் உச்சநீதிமன்றமும் தலையிட்டது. ஒருவழியாக கடந்த வாரம் டெல்லி சட்டசபை கலைக்கப்பட்டது.
டெல்லி சட்டசபைக்கு தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன.
ஆம் ஆத்மி கட்சி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்நிலையில் 5 வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கியுள்ளது அக்கட்சி.
டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று தேர்தல் பிரசாரத்தை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது. 5 வாக்குறுதிகளை முன் வைத்து ஆம் ஆத்மி கட்சி பிரசாரம் மேற்கொள்ளும் என்று அக்கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.
அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த 5 வாக்குறுதிகள்:
- சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் டெல்லி முழுவதும் கம்பியில்லா இணையதள வசதி (வைஃபை) அளிக்கப்படும்.
- டெல்லி பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படித்து வெளியேறும் மாணவர்களுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தை ஆம் ஆத்மி அமல்படுத்தும். இதன்படி, உயர்கல்வி பயில அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கடன் ஏற்பாடு செய்யப்படும். புறநகர் டெல்லியில் உள்ள கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வகையில் 20 புதிய கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தேசிய மாதிரி கணக்கெடுப்பு (நேஷனல் சேம்பிள் சர்வே) உள்ளிட்டவற்றின்படி, டெல்லியில் மட்டும் வேலையற்றோர் 3 முதல் 5 லட்சம் பேர் உள்ளனர். இதைக் களைய, டெல்லி பிரதேச அரசில் காலியாகவுள்ள 55 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
- கடந்த சில ஆண்டுகளுக்கு முன், டெல்லியில் 29 தொழில்பேட்டைகள் இருந்தன. ஆனால், மின்சாரம், சாலை வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாக 8 தொழில்பேட்டைகளாகக் குறைந்துள்ளன. இவை மேம்படுத்தப்படும்.
- விளையாட்டு அமைப்புகளில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தலையீடுகள் களையப்பட்டு விளையாட்டு நிபுணர்கள் நியமிக்கப்படுவார்கள். இளைஞர்களின் நலன் காக்க, போதைப் பொருள் இல்லாத நகரமாக டெல்லியை மாற்றுவோம்












Click it and Unblock the Notifications