ராஜினாமா செய்ய வலியுறுத்தி அருண் ஜேட்லி வீட்டை முற்றுகையிட்டு ஆம் ஆத்மியினர் போராட்டம்!
டெல்லி: கிரிக்கெட் சங்க ஊழலில் சிக்கியுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் 14 ஆண்டுகாலம் தலைவராக பதவி வகித்திருந்தார் அருண் ஜேட்லி. இவரது பதவி காலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்றன என்பது டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மியினரின் புகார்.

இதை நிராகரித்திருக்கும் அருண் ஜேட்லி, ரூ10 கோடி கேட்டு கேஜ்ரிவால் உள்ளிட்டோர் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கைத் தொடர்ந்துள்ளார். அதே நேரத்தில் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குறித்து விசாரிக்க டெல்லி மாநில அரசு முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் தலைமையில் ஒருநபர் கமிஷனை அமைத்துள்ளது.
இந்த கமிஷன் அமைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் பா.ஜ.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர். இதற்கு பதிலடியாக டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ராஜினாமா செய்ய வலியுறுத்தி அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
அப்போது தடுப்புகளை உடைத்துக் கொண்டு அருண் ஜேட்லி வீட்டுக்குள் நுழைய ஆம் ஆத்மி தொண்டர்கள் முயற்சித்தனர். இதைத் தடுத்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சித்தனர். ஆனாலும் அசராத ஆம் ஆத்மி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஜேட்லி வீட்டு பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது.












Click it and Unblock the Notifications