மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாதமாக சீரழித்த ஏபிசிடி2 நடிகர் கைது
மும்பை: பிரபுதேவா நடித்துள்ள ஏபிசிடி 2 படத்தில் நடித்திருக்கும் நிலேஷ் நிர்பாவனே என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் ஏபிசிடி2. ரெமோ டிசோசா இயக்கிய இந்த இந்தி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடனத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நிலேஷ் நிர்பாவனே என்கிற டான்சர் நடித்துள்ளார்.
மும்பையில் வசித்து வரும் அவர் தனது நண்பருடன் சேர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை ஒரு மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். அவர்கள் அந்த சிறுமியை பொது கழிப்பிடங்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
பள்ளியில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை கண்ட ஆசிரியை அவரிடம் கேட்டதற்கு சிறுமி தன்னை 3 பேர் ஏதோ செய்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசிரியை சிறுமியின் பெற்றோரிடம் இது பற்றி தெரிவித்தார். அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் நிலேஷை பிடித்து விசாரித்தபோது அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள். சிறுமி தன்னை 3 பேர் ஏதோ செய்ததாக கூறியுள்ளபோதிலும் போலீசார் 2 பேர் அவரை பலாத்காரம் செய்ததை தான் உறுதி செய்துள்ளனர்.