இன்று தாக்கலாவது 67வது பட்ஜெட்.. 10 முறை தாக்கல் செய்த மொரார்ஜி தேசாய்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் 67வது மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய பட்ஜெட்டை 10 முறை தாக்கல் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் மொரார்ஜி தேசாய். முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தது தமிழரான ஆர்.கே. சண்முகம்.
நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இன்றைய மத்திய பட்ஜெட். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது.

நமது நாட்டின் பட்ஜெட் குறித்த சில தகவல்கள்..
- ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளன்று நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
- இந்த பட்ஜெட் நிதி ஆண்டின் தொடக்கமான ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும்
- நாட்டில் இதுவரை 66 முறை பட்ஜெட்களும், 12 முறை இடைக்கால பட்ஜெட்களும், 4 முறை சிறப்பு பட்ஜெட்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று அருண்ஜேட்லி தாக்கல் செய்வது 67 வது முழு பட்ஜெட்.
- நாட்டின் முதல் பட்ஜெட்டை தமிழரான ஆர்.கே. சண்முகம் 1947 நவம்பர் 26-ந் தேதி தாக்கல் செய்தார்.
- நிதி அமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய்தான் மிக அதிகபட்சமாக 10 முறை பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
- 2013-14ஆம் ஆண்டு பட்ஜெட்டை 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி 2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டையும் சிதம்பரம் தாக்கல் செய்தார். ப.சிதம்பரம் மொத்தம் 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- முன்னதாக 2012-2013 ஆம் ஆண்டு பட்ஜெட்டை 2012 ஆம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இது அவரது 7வது பட்ஜெட்.
- யஷ்வந்த் சின்கா, ஒய்.பி. சவான், சி.டி. தேஷ்முக் ஆகியோரும் 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
- மன்மோகன் சிங், டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஆகியோர் 6 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.
- 2000ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
- 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில்தான் முற்பகல் 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அப்போது யஷ்வந்த்சின்ஹா நிதி அமைச்சராக இருந்தார்.












Click it and Unblock the Notifications