என்னது, நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகுமா?: அமித் ஷாவை கிண்டலடிக்கும் எதிர்கட்சிகள்
டெல்லி: தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல காலம் வரும் என்று கூறிவிட்டு தற்போது நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளதை பல அரசியல் கட்சி தலைவர்கள் கிண்டல் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி லோக்சபா தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நல்ல நாள்(காலம்) வரும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷாவோ நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதை பார்த்த காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அமித் ஷாவின் பேச்சை கிண்டல் செய்து பேட்டி அளித்தனர். நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று பாஜக தெரிவித்திருந்தால் யாராவது அந்த கட்சிக்கு வாக்களித்திருப்பார்களா என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். இதை எல்லாம் பார்த்த பாஜக அமித் ஷா அவ்வாறு கூறவே இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா கூறுகையில்,
பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல் மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தியுள்ளது. ஊழலை முற்றிலும் ஒழித்துவிட்டு 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
ஒரு காலத்தில் இந்தியா மிகவும் பெருமையுடன் இருந்தது. அந்த பழமையான பெருமையை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் ஆகும் என்று தான் அமித் ஷா தெரிவித்தார். பாஜகவுக்கு கெட்டப் பெயர் ஏற்பட வேண்டும் என சிலர் நல்ல காலம் வர 25 ஆண்டுகள் ஆகும் என்று அவர் தெரிவித்ததாக கூறிவிட்டனர் என்றார்.












Click it and Unblock the Notifications