தொடர் படப்பிடிப்பு.. நடிகர் சுதீப் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்: பிரபல கன்னட நடிகர் சுதீப் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல கன்னட நடிகர் சுதீப். இவர் தமிழில் ‘நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். விஜய்யுடன் ‘புலி' மற்றும் ‘பாகுபலி' படங்களிலும் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 'முடிஞ்சா இவனப் பிடி' என்ற படத்திலும் சுதீப் நடித்து வருகிறார். மேலும்‘ஹெப்புலி' எனும் கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நேற்று சுதீப்பிற்கு திடீர் காய்ச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் உடனடியாக பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தற்போது அவர் குணமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘நான் ஓய்வில்லாமல் படப்பிடிப்பில் இருந்ததால் உடல்நிலை மோசமடைந்து விட்டது. ஓய்வு எடுத்தால் சரியாகி விடும். எனவே எனது உடல் நிலை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.