நடிகையை விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை: சப்.இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
திருவனந்தபுரம்: நண்பருடன் நள்ளிரவில் இருசக்கரவாகனத்தில் வந்த மலையாள நடிகையை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விடிய விடிய காவல்நிலையத்தில் விசாரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தன்னை துன்புறுதியாக நடிகை அளித்த புகாரினால் எஸ்ஐ உட்பட 4 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் ஹிமாசங்கர். இவர் மலையாளத்தில் நிஹரிகா, ஆஸ்தடிக் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 25ம் தேதி இரவு கொல்லத்தை சேர்ந்த இவரது நண்பரான ஸ்ரீராம்ரமேஷ் (25) என்பவருடன் நாடக பயிற்சிக்காக இருசக்கர வாகனத்தில் திருவனந்தபுரம் சென்றார்.
அவர்கள் இருவரும் நள்ளிரவு ராமன்குளங்கரை சந்திப்பில் சென்றுகொண்டிருந்த போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கொல்லம் கட்டுப்பாட்டறை போலீசார் வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். ஆவணங்களை சரிபார்த்த பின் நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் அவர்களை விடுவித்தனர்.
பின்னர், சின்னக்கடை அருகே செல்லும்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கொல்லம் கிழக்கு போலீசார் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் நாடக பயிற்சிக்கு செல்வதாக கூறினர். ஆனால் போலீசார், சந்தேகம் இருப்பதாக கூறி அவர்களை விடுவிக்க மறுத்து காவல்நிலையம் அழைத்து சென்றனர்.
ஸ்ரீராம்ரமேஷ் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அவர் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்களை விடுவிக்கவில்லை. காலை சப் இன்ஸ்பெக்டர் வந்த பின்னரே அவர்களை விடுவித்தனர். அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
இது குறித்து கொல்லம் போலீஸ் கமிஷனர் தேபேஸ்குமார் பெஹராவிடம் ஸ்ரீராம்ரமேஷ் புகார் அளித்தார். புகார் மீது விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். விசாரணையில், கொல்லம் கட்டுப்பாட்டறை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், கிழக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் ஜார்ஜ், ஷாஜஹான் ஆகியோர் தகுந்த ஆவணங்கள் காண்பித்த பின்னரும் அவர்களை விடுவிக்காதது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் கொல்லம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார். நடிகையை விடிய விடிய காவல் நிலையத்தில் அமர வைத்திருந்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.