நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை !
நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: முன்னாள் எம்.எல்.ஏ.,வும், பிரபல தெலுங்கு நடிகையுமான ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் மும்பையில் உள்ள அவரது வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நடிகை ஜெயசுதா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமானவர். சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், மேல்நாட்டு மருமகள், பட்டிக்காட்டு ராஜா, பட்டாக்கத்தி பைரவன், பாண்டியன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஜெயசுதா. தெலுங்கில் ராமாராவ் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர்.
இவர் பாலிவுட் படஉலகில் முன்னாள் கதாநாயகனாக இருந்த நடிகர் ஜித்தேந்திராவின் உறவினரான நிதின் கபூர் என்பவரை கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஷ்ரேயன், நிஹர் என்ற இருமகன்கள் உள்ளனர்.
இவரது கணவர் ''மேரா பட்டி சிர்ப்'', ''காஞ்சனா சீதா'', ''கலிகாலம்'', ''ஹேண்ட்ஸ் அப்'' போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளார். தனது மகன் ஷ்ரேயனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை நிதின் கபூர் தயாரித்து இருந்தார். அந்தப் படம் தோல்வியைத் தழுவியது.
அவர் தயாரித்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இதனால், நிதி நெருக்கடிக்கு நிதின் தள்ளப்பட்டதாகவும், அதனால் மனமுடைந்து இன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மாடியில் இருந்து குதித்து நிதின் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.