கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெறுவேன்- ஸ்டாலின் எதிரி அல்ல: 'காங்கிரஸ்' நடிகை குஷ்பு
டெல்லி: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தாலும் சென்னை சென்றால் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
திமுகவில் 4 ஆண்டுகாலம் இருந்த நடிகை குஷ்பு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியைவிட்டு விலகினார். பின்னர் பாஜக அல்லது அதிமுகவில் இணைவார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனை திட்டவட்டமாக மறுத்த நடிகை குஷ்பு திடீரென நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் உடன் இருந்தார்.
இது தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு குஷ்பு அளித்திருக்கும் பேட்டி விவரம்:
வேற்றுமையில் ஒற்றுமை
காங்கிரஸ் கட்சி மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையின் காரணமாகத்தான் அதில் சேர்ந்தேன். சாதி, மத வேறுபாடு இல்லாத, வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
ரத்தத்தில் ஊறிய காங்கிரஸ்
அதை காங்கிரஸ் கட்சியால் வழங்க முடியும் என்று கருதியே காங்கிரஸில் இணைந்தேன். மும்பையில் பிறந்து வளர்ந்ததால் சிறு வயதில் இருந்தே நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவள் என்பதே உண்மை. காங்கிரஸ் என் ரத்தத்தோடு ஊறிய ஒன்று.
பதவிக்காக இல்லை..
நான் பதவியை எதிர்பார்க்கக் கூடியவள் இல்லை. திமுகவில் 4 ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன். பதவி வேண்டும் என்றால், அந்தக் கட்சியிலேயே கேட்டுப் பெற்றிருக்க முடியும்.
காங்கிரஸுக்கு தெரியும்,..
ஆனால் பதவி கேட்டதும் இல்லை. அதை விரும்பியதும் இல்லை. எந்தப் பொறுப்பு கொடுக்க வேண்டும் காங்கிரஸூக்குத் தெரியும். அவர்கள் கொடுப்பார்கள்.
ஸ்டாலின் எதிரியே இல்லை..
மு.க.ஸ்டாலினை எப்போதுமே என்னுடைய எதிரி என்று கூறியது இல்லை. அவருடன் பிரச்னை என்று கூறியதும் இல்லை. என்னுடைய ராஜினாமா கடிதம் திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலினுக்கும் சென்றிருக்கும்.
இப்போதுகூட எங்காவது ஸ்டாலினைப் பார்த்தால், அவருக்கு வணக்கம் சொல்லமாட்டேன் என்பதெல்லாம் இல்லை. அந்தப் பண்பாடு, மரியாதை என்றைக்கும் இருக்கும். சிலர் எல்லா விஷயத்துக்கும் கண், காது வைத்து உருவகப்படுத்துவர். அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
என் வீடு மீதான தாக்குதலுக்குப் பிறகும் ஒன்றரை ஆண்டுகள் திமுகவில் இருந்துள்ளேன். அதனால் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், அப்போதே திமுகவிலிருந்து வெளிவந்து என் எதிர்ப்பைத் தெரிவிதிருக்க முடியும்.
திமுக- காங்கிரஸ் கூட்டணி அமைந்தால்...
வரும் சட்டசபை தேர்தலில் திமுகவும் காங்கிரஸூம் கூட்டணி அமைத்தால் எனக்கு எதிர்ப்பு ஒன்று இல்லை. கூட்டணி தொடர்பாக கட்சியின் பெரியவர்கள் எடுக்க வேண்டிய முடிவு இது.
கருணாநிதியை சந்திப்பேன்..
தற்போது டெல்லியில் உள்ளேன். சென்னைக்கு வந்தால், கண்டிப்பாக திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவேன். கருணாநிதி மிகச் சிறந்த தலைவர். அவர் மீது எனக்கு அன்பு, மரியாதை என்றைக்கும் உண்டு.
இவ்வாறு நடிகை குஷ்பு கூறியுள்ளார்.