ஆந்திர சட்டப் பேரவையில் இருந்து நடிகை ரோஜா ஓராண்டு சஸ்பெண்ட்
ஹைதராபாத்: ஆந்திர சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டதாக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஓராண்டுக்கு அவை நடவடிகையில் கலந்து கொள்ள தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் கால் மணி என்ற பெயரில் கந்து வட்டி கொடுமை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் அம்மாநில எம்.எல்.ஏ., எம்.எல்.சி. உள்ளிட்ட அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. கால் மணி என்ற பெயரில் அப்பாவிகளுக்கு சிறு கடன்களை கொடுத்து அதிகவட்டி வசூலிக்கும் தொழிலை அரசியல் புள்ளிகளின் ஆதரவுடன் சிலர் அமோகமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு மெத்தனமாக இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆந்திர சட்டசபையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிழவியது. பின்னர் அமளியில் ஈடுபட்ட ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .
விஜயவாடா பகுதியில் கந்து வட்டி கொடுமை தொடர்வதாகவும், இதில் ஆளுங்கட்சியனருக்கு தொடர்பு இருப்பதாகவும் சட்டப் பேரவையில் ரோஜா பேசினார். மேலும், இதை தடுக்க இயலாத முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் பெறத் தகுதியில்லை என்றும் பேசினார்.
இந்நிலையில், ஆந்திர சட்டசபையில், முதல்வர் குறி்த்து அவதூறு கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ. ரோஜா சபை நடவடிக்கைகளில் ஓராண்டிற்கு கலந்துகொள்ள தடைவிதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி அருகேயுள்ள நகரி தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக நடிகை ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications