கொடுமைப்படுத்துவதாக தாய் மீது நடிகை சுவாதி ரெட்டி புகார்... போலீஸ் நிலையத்தில் அடித்த தாய்
ஹைதராபாத்: பணம் கேட்டு அடித்து கொடுமைப்படுத்துவதாக தாய் மீது தெலுங்கு நடிகை சுவாதி ரெட்டி போலீசில் புகார் அளித்தார். மகளை கடத்தி விட்டதாக நடிகையின் தாயார் புகார் அளித்த நிலையில் தாய் மீது நடிகை புகார் அளித்தார். அப்போது போலீஸ் நிலையத்திலேயே நடிகையை, அவரது தாயார் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கில் ‘பேக் பெஞ்ச்,' ‘லவ்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் சுவாதி ரெட்டி. இவர் கடத்தப்பட்டதாக அவரது தாய் நாகேந்திரம்மா ஹைதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார். அந்த மனுவில், எனது மகள் சுவாதி ரெட்டி தெலுங்கு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு குண்டூரை சேர்ந்த சீனிவாச ரெட்டி என்பவருடன் சுவாதிக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். சீனிவாச ரெட்டி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
சீனிவாச ரெட்டியை சந்தித்த பிறகு சுவாதி நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் சுவாதியும், நானும் தூங்கிக்கொண்டு இருந்தோம். நள்ளிரவில் சீனிவாச ரெட்டி வந்து சுவாதியை கடத்திச்சென்று விட்டார். வீட்டில் இருந்த பணம், நகைகளையும் காணவில்லை. நான் போனில் தொடர்பு கொண்டும் சுவாதியுடன் பேச முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவாதியை தேடி வந்த நிலையில் சுவாதி, திடீரென்று பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். என்னை யாரும் கடத்தவில்லை. நானாகத்தான் வெளியேறினேன். எனது தாய் பணம் கேட்டு தினமும் என்னை அடித்து கொடுமைபடுத்தினார். அதனால்தான் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வெளியேறினேன், சீனிவாச ரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது என்று தனது தாய் மீது புகார் அளித்தார் சுவாதி ரெட்டி.
இதைத்தொடர்ந்து சுவாதிக்கும், அவரது தாய்க்கும் இடையே காவல் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் திட்டி சண்டை போட்டுக்கொண்டனர். திடீரென்று போலீசார் முன்னிலையிலேயே சுவாதியை அவரது தாயார் அடித்து உதைத்தார். காவல்நிலையத்தில் நடிகையும், அவரது தாயாரும் சண்டை போட்டுக்கொண்ட சம்பவம் ஆந்திரா திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications