ஆதர்ஷ் ஊழல்: முன்னாள் தூதர் தேவ்யானி மீது சிபிஐ குற்றபத்திரிகை
டெல்லி: அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் தூதர் தேவ்யானி மீது ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது.
நியூயார்க்கில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்தவர் தேவயானி கோப்ரகடே. இவர் தனது வீட்டில் வேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து சென்ற வேலைக்கார பெண்ணுக்கு அமெரிக்க சட்டப்படி உரிய சம்பளம் தரவில்லை என்ற புகாரில் சிக்கினார்.

மேலும் வேலைக்கார பெண்ணுக்கு விசா வாங்கியதிலும் சில முறைகேடுகள் செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக அமெரிக்க போலீஸ் பொது இடத்தில் தேவ்யானியை கைது செய்தது. இந்த விவகாரம் இருநாடுகளிடையே உறவில் விரிசலையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் ராணுவ வீரர்களின் மனைவிகளுக்காக மும்பையில் கட்டப்பட்ட ஆதர்ஷ் குடியிருப்பில் விதிமுறைகள் மீறி வீடு வாங்கியிருப்பதாக தேவ்யானி மற்றும் அவரது தந்தை மீது புகார் கூறப்பட்ட விவகாரமும் விஸ்வரூபமெடுத்தது.
தேவ்யானிக்கு ஏற்கனவே மும்பையில் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை மறைத்து ஆதர்ஷ் குடியிருப்பில் அவர் வீடு வாங்கியிருப்பதாக இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிஐ கூறுகிறது.
மேலும் வீடு வாங்குவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்ற விவரத்திலும் பல உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக சிபிஐ சந்தேகம் அடைந்துள்ளது. இதை தொடர்ந்து ஆதர்ஷ் ஊழல் குற்றப்பத்திரிகையில் தேவ்யானி மற்றும் அவரது தந்தையை சேர்த்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications