ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எடுத்த திடீர் முடிவு.. மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகல்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகி உள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பதவி விலகல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மல்தஹா தக்சின் லோக்சபா தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் இஷா கான் சவுத்ரி வெற்றி பெற்றார். மீதமுள்ள 41 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பெஹ்ரம்பூர் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் யுசுப் பதானிடம் 85,022 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெஹ்ரம்பூர் லோக்சபா தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முறை முன்னாள் கிரிக்கெட் வீரர் யுசுப் பதானிடம் தோல்வியைத் தழுவினார்.
இந்நிலையில், தோல்விக்குப் பொறுப்பேற்று, மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. விரைவில் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சிக்கு முழு நேர தலைவர் நியமிக்கப்படுவார் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மாநில காங்கிரஸ் கமிட்டி ஆலோசனையை தொடர்ந்து மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் ராஜினாமா காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையால் ஏற்கப்பட்டதா என்பது உள்ளிட்ட எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் மம்தா பானர்ஜி இடையே கடுமையான வார்த்தைப் போர் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 2012 முதல் 2014 வரை ரயில்வே இணை அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2019 முதல் 2024 வரை லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்பட்டார். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த சோமேந்திரநாத் மித்ராவின் மறைவைத் தொடர்ந்து, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications