நாடாளுமன்றத்தில் "அரை சதம்" போட்டது அதிமுக... 3வது பெரிய கட்சியாக உயர்ந்தது!
டெல்லி: நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது அதிமுக. அக்கட்சிக்கு தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மொத்தமாக 50 எம்.பிக்கள் உள்ளனர்.
2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தல்தான் அதிமுகவை உச்சாணிக்குக் கொண்டு செல்ல முக்கியக் காரணமாகும். இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை அப்படியே அள்ளி விட்டது அதிமுக. மீதமுள்ள இரண்டு இடத்தை பாஜகவும், பாமகவும் பெற்றன.
அதேபோல ராஜ்யசபாவில் தற்போது 13 எம்.பிக்கள் அதிமுகவுக்கு உள்ளனர். இவர்களையும் சேர்த்தால் இரு அவைகளிலும் மொத்தமாக 50 எம்.பிக்கள் அதிமுகவுக்கு உள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
நாடாளுமன்றத்தில் பாஜக 331 எம்.பிக்களுடன் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 108 பேர் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் அதிமுக உள்ளது. 4வது இடம்தான் மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு. அக்கட்சிக்கு 46 எம்.பிக்கள் உள்ளனர்.
ராஜ்யசபாவில் உள்ள 13 எம்.பிக்களுடன் மொத்தமாக 590 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுக நாடாளுமன்றத்தில் முக்கிய சக்தியாக திகழும். குறிப்பாக சட்ட மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக எம்.பிக்கள் முக்கியமாக தேவைப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தில் இந்த அளவுக்கு அதிக எம்.பிக்கள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். எம்.ஜி.ஆர். காலத்தில் கூட இது நடந்ததில்லை என்பது முக்கியமானது