ஜார்க்கண்ட் முதல்வர் பதவி வேட்பாளர்: யஷ்வந்தா சின்ஹாவுக்கு அத்வானி ஆதரவு
பாட்னா: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் வேட்பாளராக பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த வேண்டும் என்று மூத்த பாஜக தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் நிலவி வரும் மின்வெட்டு பிரச்சனையை கண்டித்து கடந்த 2ம் தேதி போராட்டம் நடத்தினார். அப்போது அம்மாநில மின்வாரியத் துறை உயர் அதிகாரி தாக்கப்பட்டதையடுத்து யஷ்வந்த் சின்ஹா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் தொகையை செலுத்த மறுத்ததால் யஷ்வந்த் சின்ஹா ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை மூத்த பாஜக தலைவர் அத்வானி, முன்னாள் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா மற்றும் மாநில பாஜக தலைவர் ரவிந்திர சாய் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
அதன் பிறகு அத்வானி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வரவிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை தான் முதல்வர் வேட்பாளராக நிறுத்த வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்த அவர் தான் முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர். பாஜகவினர் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். எனவே சின்ஹா பாஜக தலைவர்களின் உணர்வுகளை மதித்து சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றார்.
அத்வானியின் நம்பிக்கைக்குரியவரான சின்ஹா நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஓரங்கட்டப்பட்டார். அத்வானி சின்ஹாவை முதல்வர் பதவிக்கு பொருத்தமானவர் என்று கூறுகிறார். ஆனால் சின்ஹாவை ஆளுநராக்கப் போவதாக பாஜக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications