ஏரோ இந்தியா... வானத்தை அதிர வைக்கும் விமானங்கள்.. அதிகரிக்கும் கூட்டம்..!
பெங்களூரு: பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்தியா விமானக் கண்காட்சிக்கு முதல் நாளான நேற்றை விட இரண்டாவது நாளான இன்று நல்ல கூட்டம் வந்தது.
பெங்களூர் எலகங்கா விமானப்படை நிலையத்தில் வருடா வருடம் நடக்கும் ஏரோ இந்தியா ஷோ நேற்று தொடங்கியது. பிரதமர் மோடி இதைத் தொடங்கி வைத்தார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்கள் இதில் கலந்து கொண்டுள்ளன.

நேற்றைய தொடக்க விழாவில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் அல்லது அதற்கு இணையான பதவியில் உள்ளவர்கள் வந்திருந்தனர்.

இந்திய விமானப்படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், தேஜாஸ், துருவ், சுகோய் 30 எம்கேஐ, பிலேட்டஸ் பேசிக் டிரெய்னர் விமானம் உள்ளிட்ட பல இதில் கலந்து கொண்டுள்ளன.

நேற்று பிரதமர் வருகையால் நிலவிய பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக கூட்டம் அதிகமாக இல்லை. ஆனால் இன்று நல்ல கூட்டம் காணப்பட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கண்காட்சிக்கு விசிட் அடித்தார். தொழில் முதலீடுகளைப் பிடிக்கும் நோக்கத்தில் பேசி விட்டும் சென்றார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவும் இன்றைய கண்காட்சிக்கு வந்திருந்தார்.

ஏரோ இந்தியா கண்காட்சி தொடர்பான ஸ்டாம்பு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இதுவரை இப்படி ஸ்டாம்பு வெளியிடப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஸ்டாம்ப்பை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பாரிக்கர் பேசுகையில், இது அருமையான கண்காட்சி. கடந்த முறையை விட இந்த முறை அதிக விமானங்கள் வந்துள்ளன. எச்ஏஎல்லின் தயாரிப்புகளான தேஜாஸ் மற்றும் துருவ் ஆகியவற்றின் அணிவகுப்பைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications