புல்ஸ் இல்லாமல் களையிழந்த விமான கண்காட்சி
பெங்களூர்: புல்ஸ் சாகச அணியில்லாமல் விமான கண்காட்சி வெள்ளிக்கிழமை களையிழந்து இருந்தது.
பெங்களூர் ஏலஹன்காவில் கடந்த 18ம் தேதி துவங்கி விமான கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் ரெட் புல்ஸ் சாகச அணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வானில் சாகசம் செய்கையில் ரெட் புல்ஸ் அணி விமானங்கள் இரண்டு உரசிக் கொண்டன. நல்லவேளையாக பெரிய விபத்து எதுவும் ஏற்படவில்லை.

ஒரு விமானத்தின் புரபெல்லர் உடைந்து போனது. மற்றொரு விமானத்தின் இறக்கையில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து புல்ஸ் அணி இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. புல்ஸ் அணி இல்லாமல் இன்றைய கண்காட்சி களையிழந்திருந்தது. சாகசங்களுக்கு பெயர் போன புல்ஸ் அணி இல்லாததால் இன்று பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கண்காட்சி நடக்கும் இடத்தில் பல நாட்டு நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்திருந்தன. அந்த ஸ்டால்கள் இன்றுடன் மூடப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் பொதுமக்கள் விமானங்களின் சாகசங்களை கண்டுகளிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நாளையும், நாளை மறுநாளும் சுமார் 1 லட்சம் பேர் விமான சாகசங்களை பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications