பதற்றங்களுக்கு நடுவே, ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு எப்போது தேர்தல்? வெளியான தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபைக்கு, லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் ஜூன் மாதத்தில், அங்கு தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது. லோக்சபா தேர்தலுடன் இந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் அங்கு சட்டசபை தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம், மாநில நிர்வாக அதிகாரிகள் ஆகியோருடன், நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக ஜூன் மாதத்தில் தேர்தலை நடத்தலாம் என்று தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம், தீவிரவாதிகள் ஊடுருவல் போன்றவற்றின் காரணமாக, சட்டசபை தேர்தலை ஜூன் மாதம் நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இப்போது கிடைத்துள்ள தகவல்படி, ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு ஜூன் 4-ஆம் தேதி வாக்குப் பதிவை ஆரம்பித்து, ஏழு கட்டங்களாக அவற்றை நடத்தி, அமர்நாத் யாத்திரை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஜூலை 1-ஆம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்தி முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜூலை 3ம் தேதியுடன் குடியரசு தலைவர் ஆட்சிக்கான காலக்கெடு, ஜம்மு காஷ்மீரில், முடிவுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications