இதோ இன்னும் ஒரு போட்டோ அக்கப்போர்.. 'ரவுடி' பைக்கில் ராகுல்.. படம் காட்டும் பாஜக!
டெல்லி: அறுதப் பழசான ஒரு ராகுல் காந்தி படத்தை எடுத்து வெளியிட்டு இதோ பாருங்கள், பயங்கரமான குற்றவாளி, ஒரு ரவுடியுடன் ராகுல் காந்தி இருப்பதை என்று கூறி போட்டோ சண்டையில் புது ஐட்டத்தை இறக்கி விட்டுள்ளது பாஜக.
தேர்தல் முடியப் போகும் நிலையில் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் இடையே வாய்ச் சண்டை, வாதச் சண்டை முற்றி தற்போது புகைப்படச் சண்டைக்கு வந்துள்ளனர்.

இரு தரப்பும் மாறி மாறி புகைப்படங்கள வெளியிட்டு வருகின்றன. முதலில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ராவின் நிலக் குவிப்பு தொடர்பாக வீடியோ படத்தை வெளியிட்டது பாஜக.
இதனால் கோபமடைந்த காங்கிரஸ், மோடிக்கும் ஹவாலா மன்னன் அப்ரோஸ் பட்டாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி ஒரு படத்தை வெளியிட்டது.
இதற்குப் பதிலடியாக பாஜக தரப்பு ஒரு படத்தை வெளியிட்டது. அதில் காங்கிரஸ் எம்.பி. அஸாருதீன் அதே அப்ரோஸுடன் இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் பாஜக தரப்பிலிருந்து வேறு ஒரு படத்தை ரிலீஸ் செய்துள்ளனர். இது ராகுல் காந்தியின் பழைய படம்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி தனது டேப்ளட்டில் வைத்து இந்தப் படத்தை செய்தியாளர்களுக்குக் காட்டினார். அதில் ராகுல் காந்தி ஒரு பைக்கின் பின்புறம் உட்கார்ந்திருக்கிறார். வண்டியை ஒருவர் ஓட்டுகிறார். அந்த நபரைச் சுட்டிக் காட்டிய மீனாட்சி, இவர் ராஜஸ்தானில் பிரபலமான கிரிமினல். ரவுடி, பல வழக்குகள் இவர் மீது உள்ளன.இவரது பெயர் ஆசிப் பில்லா.
இந்தப் படத்தைப் பார்த்து நாம் ஆசிப் பில்லாவும், ராகுலும் நெருங்கிய நண்பர்கள். ஆசிப் பில்லா செய்யும் அனைத்துக்கும் ராகுல் காந்தியின் ஆசி உண்டு என்று சொல்லலாமா என்று கேட்டார்.
மேலும் அவர் விளக்குகையில், அரசியல்வாதிகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள். அப்படிப்பட்டவர்களுடன் பலர் போட்டோ எடுத்துக் கொள்வதும், மாலை போடுவதும் சாதாரண விஷயம். எனவே அதை வைத்து அந்தத் தலைவர்களை குற்றம் சாட்ட முடியாது, கூடாது என்றார்.
வர வர வீரப்பன் ரேஞ்சுக்கு போய்க் கொண்டிக்கின்றன அரசியல் கட்சிகள்.. அடுத்து யார் எந்தப் புகைப்படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களோ...












Click it and Unblock the Notifications