மீண்டும் ஓடும் கர்நாடக அரசுப் பேருந்துகள்!
பெங்களூரு: தமிழகத்திற்குச் செல்லும் பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்த கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக நிறுவனம் நேற்று பிற்பகல் முதல் தனது சேவையை மீண்டும் தொடங்கியது.
ஜெயலலிதா தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் அசம்பாவிதம் நடைபெறலாம் என்ற அச்சத்தில் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கும், கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கும் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் திங்கள்கிழமை மாலை நிறுத்தப்பட்டன. இதனால் இரு மார்க்கத்திலும் ஒரு கர்நாடக அரசுப் பேருந்தும் ஓடவில்லை.
சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் கர்நாடகத்திற்கு அந்த மாநில அரசுப் பேருந்துகள் ஓடவில்லை. சென்னையில் மட்டும் 40க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் கோயம்பேடு டிப்போவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று பிற்பகலுக்கு மேல் கர்நாடக அரசுப் பேருந்துகள் மீண்டும் ஓடத் தொடங்கின. கர்நாடகத்திலிருந்தும் பஸ்கள் வந்தன. தமிழகத்திலிருந்தும் சென்றன.
அதேசமயம் இரு மார்க்கத்திலும் தமிழக அரசுப் பேருந்துகள் வழக்கம் போல இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.