ஜார்கண்ட் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு! இரவில் கைதான ஹேமந்த் சோரன்! பரபரக்கும் ராஞ்சி
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரனை இன்று இரவு அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது. இதையடுத்து ஜார்கண்ட்டின் புதிய முதலமைச்சராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் இருந்தார். இந்நிலையில் தான் நில சுரங்க முறைகேடு குற்றச்சாட்டுகள் ஹேமந்த் சோரனுக்கு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளன.

மேலும் அவரிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தான் எப்போது வேண்டுமானாலும் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில் தான் இன்று ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறையினர் ஹேமந்த் சோரனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரன் அதிரடியாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தான் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் ஜார்கண்ட்டின் புதிய முதல்வர் யார் ? என்ற பெரிய கேள்வி எழுந்தது. மேலும் ஹேமந்த் சோரன் தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட இருப்பதை முன்கூட்டியே அறிந்து இருந்தார். இதையடுத்து ராஞ்சியில் நேற்று அடுத்த முதல்வரை தேர்வு செய்ய எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஹேமந்த் சோரன் கூட்டினார்.
இந்த கூட்டத்தில் அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த முதல்வர் யார்? என்பது தொடர்பாக ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான சாம்பை சோரன் ஆகியோரின் பெயர்களை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
இதில் அதிகமான எம்எல்ஏக்கள் சாம்பை சோரனின் பெயரை தேர்வு செய்தனர். இது ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று ஹேமந்த் சோரன் கைதான நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஜார்க்கண்ட்டின் புதிய முதல்வராக சாம்பை சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications