அடாவடிகளுக்கு நடுவே முடிந்த கோரக்பூர் வாக்கு எண்ணிக்கை!
Recommended Video
டெல்லி: கோரக்பூர் லோக்சபா இடைத் தேர்தலில் பாஜக தோல்வி முகம் காட்டியதும் அங்கு பெரும் தில்லுமுல்லுகளும், அடாவடிகளும் அரங்கேறின.
கோரக்பூர் லோக்சபா தொகுதியை போலவே, உத்தரபிரதேசத்தின் பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ம் தேதி நடந்தன.
கோரக்பூர் லோக்சபா உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வராக பொறுப்பேற்றதாலும், பூல்பூர் தொகுதி உறுப்பினராக இருந்த கேசவ் பிரசாத் மவுரியா துணை முதல்வரானதாலும் இடைத் தேர்தல்கள் நடந்தன.
2 தொகுதிகளிலும் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவை தோற்கடிக்கும் திட்டத்தோடு, சமாஜ்வாதிக்கு ஆதரவு அளித்தது.
பாஜக பின்னடவு
காலை 11.45 மணி நிலவரப்படி, கோரக்பூர் தொகுதியில், சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் நிஷாத் 1523 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜகவின் உபேந்திர தத் சுக்லாவைவிட முன்னிலை பெற்றிருந்தார். அதேபோல பூல்பூர் தொகுதியில், சமாஜ்வாதியின் நாகேந்திர பிரதாப் சிங், பாஜகவின் குஷ்லேந்திர சிங் பட்டேலைவிட 12,231 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். அதேபோல அரேரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதாதள வேட்பாளர் சரபராஸ் ஆலம் முன்னிலை வகித்தார்.
தகவல் வெளியாகவில்லை
ஆனால், காலை முதலே கோரக்பூர் தொகுதி நிலவரத்தை தேர்தல் அலுவலர்கள் வெளியிடவில்லை. மீடியாவினர் மிகுந்த நெருக்கடி கொடுத்து கேட்டபிறகே, தகவல்கள் வெளியிடப்பட ஆரம்பித்தன. 13 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நண்பகலில் முடிவடைந்த நிலையில் கூட, 4வது சுற்று வாக்கு எண்ணிக்கைதான் வெளியிடப்பட்டது.
கவுரவ பிரச்சினை
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி என்பதால், பாஜக இதை கவுரவ பிரச்சினையாக எடுத்துள்ளது. வென்றேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கர்நாடகாவில் யோகி ஆதித்யநாத்தை அழைத்து வந்து பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. இப்படியொரு சூழ்நிலையில், கோரக்பூரில் பாஜக தோற்றால் அது கர்நாடகா வரை எதிரொலிக்கும்.
கோல்மால்கள்
இதுபோன்ற காரணங்களால்தான், வாக்கு எண்ணிக்கை விவரங்களை வெளியிடாமல் தில்லுமுல்லுகள் அரங்கேறியதாக கூறப்படுகிறது. இருப்பினும் பாஜக வேட்பாளர் பின்னடைவை சந்தித்தார். ஆத்திரமடைந்த பாஜகவினர், மீடியாக்காரர்களை வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேற்றினர். மீடியாக்களுக்கு, உடனுக்குடன் வாக்கு எண்ணிக்கை தகவல் தெரிவிக்க கூடாது என தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஒரு மர்மமான சூழல் அங்கு நிலவியது. இருப்பினும் இறுதியில் பாஜக வேட்பாளர் தோல்வியடைந்து, சமாஜ்வாதி வேட்பாளர் வெற்றி பெற்றார்.