கோர்ட் வளாகத்தில் பரபரப்பு.. தரையில் அமர்ந்து அழுத ராம் ரஹிம்.. தரதரவென இழுத்து சென்ற போலீசார்
டெல்லி: 'தேரா சச்சா சவுதா' தலைவரான குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த 15 வருடகால வழக்கில் குற்றவாளி என, பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இன்று இரு தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ராம் ரஹிமுக்கு 10 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பை கேட்டு தரையில் அமர்ந்த ராம் ரஹிம் கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் அங்கிருந்து தான் நகரப்போவதில்லை என கூறி அடம் பிடித்தார். இதையடுத்து வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தரதரவென இழுத்து சென்றனர் போலீசார். அப்போது தனக்கு மயக்கம் ஏற்படுவதை போல உணர்வதாக அவர் கூறினார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவசர மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.
இதன்பிறகு சிறையில் அடைக்கும் முன்பாக நடைபெறக்கூடிய மருத்துவ பரிசோதனைகளை நடத்திவிட்டு அவர் சிறையில் அடைக்கப்படுவார். சிறை கைதிகளுக்கான வெள்ளை சீருடை அவருக்கு வழங்கப்படும்.