பிரதமர் மோடியை பாராட்டும் அரவிந்த் கேஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிரதமர் மோடியை பாராட்டிப் பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகிறது. இதற்காக ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏக்களை விலை பேசுவதாகவும் புகார்கள் எழுந்தன.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஒருவரை பாஜக மூத்த தலைவர் ஒருவர் ரூ4 கோடிக்கு பேரம் பேசிய சிடி ஒன்றும் வெளியிடப்பட்டது.. இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஆம் ஆத்மி தலைவர்கள் ஒவ்வொருவராக பிரதமர் மோடியை பாராட்டி வருகின்றனர்.

குமார் விஸ்வாஸ்
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ், அண்மையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விட தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறியிருந்தார்.

கேஜ்ரிவால் புகழாரம்
இந்த நிலையில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளதாவது:

மக்கள் நம்பிக்கை
மோடி அரசு மீது நாட்டு மக்கள் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளனர். பண வீக்க விகிதத்தை கட்டுப்படுத்துதல், ஊழலை தடுத்தல், விலை வாசி உயர்வைக் குறைத்தல் ஆகியவற்றை மோடி செய்வார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புகழ்பெற்ற தலைவர்
ஆனால் இந்த எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் எதிர்பார்ப்புகளாகவே இன்னமும் இருக்கிறது. நாட்டின் புகழ்பெற்ற தலைவர்களில் மோடியும் ஒருவர். நான் பிரதமராக ஆசைப்படுவதாக எனக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுகிறது.

பிரதமராகும் ஆசை இல்லை
அப்படி ஒரு ஆசை எனக்கு இல்லை. என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட முறையில்தான் நான் மோடியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டேன்.

தேர்தல் நடத்தியிருந்தால்..
டெல்லி முதல்வர் பதவியை நான் ராஜினாமா செய்த உடனேயே சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் பெரும்பான்மையுடன் அம்மாநில முதல்வராக 5 ஆண்டுகால ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பேன்.
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications