பஞ்சாப்பில் இருந்து 'உருளைக்கிழங்கு' இறக்குமதி செய்யும் ஒடிஷா பாஜக அரசு- தவிக்க விடுதே மமதா மாநிலம்!
புவனேஸ்வர்: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பானர்ஜி முதல்வராக இருக்கும் மேற்கு வங்கத்தில் இருந்து பாஜக ஆளும் ஒடிஷா மாநிலத்துக்கு உருளைக்கிழங்கு கொண்டு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கிடுகிடுவென உயர்ந்த உருளைக்கிழங்கு விலையை கட்டுப்படுத்த ஒடிஷாவில் ஆளும் பாஜக போராடி வருகிறது. உருளைக்கிழங்கு விலை உயர்வைக் கட்டுப்படுத்த உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் இருந்தும் 'இறக்குமதி' செய்யப் போகிறதாம் ஒடிஷா.
நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் மிக அதிகமாக உருளைக்கிழங்கு சாகுபடி நடைபெறுகிறது. இதற்கு அடுத்த இடம் மேற்கு வங்க மாநிலம்.

மேற்கு வங்கத்தில் இருந்து அதிக அளவில் ஒடிஷாவுக்குதான் உருளைக்கிழங்கு 'ஏற்றுமதி'யாகிறது. ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு செல்லும் டிரக் உரிமையாளர், மேற்கு வங்க அரசுக்கு எதிராக தொடர் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். இதனால் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, உருளைக்கிழங்கு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைத் தவிர்க்க ஒடிஷாவுக்கான 'ஏற்றுமதி'க்கு தடை விதித்தார்.
இதனால் ஒடிஷா அதிர்ச்சியடைந்தது. அம்மாநிலத்தில் உருளைக்கிழங்கு விலை 1 கிலோ ரூ70 வரை உயர்ந்தது. ஒடிஷாவில் புதியதாக ஆட்சி அமைத்த பாஜக அரசு நிலைமையை சமாளிக்க உடனடியாக உத்தரப்பிரதேசத்தில் இருந்து பெருமளவு உருளைக்கிழங்கை 'இறக்க்குமதி' செய்து வருகிறது. இதனால் உருளைக்கிழங்கு விலையை ஓரளவுக்கு கட்டுப்படுத்திவிட்டது ஒடிஷா அரசு.
ஆனால் உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து பெறப்படும் உருளைக்கிழங்கு போதுமானதாகவும் இல்லை; அது தரமானதாகவும் இல்லை என்கிற குமுறல் புதிய பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இதனால் தற்போது பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கை 'இறக்குமதி' செய்யப் போகிறதாம் ஒடிஷா. இதற்காக பஞ்சாப் மாநில அரசுடன் ஒடிஷா பாஜக அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
ஒடிஷாவில் ஆளும் பாஜக அரசை பாடாய்படுத்தி வருகிறது இந்த 'உருளைக்கிழங்கு அரசியல்'. ஒடிஷா மக்களுக்கு போதுமான அளவு உருளைக்கிழங்கு உரிய விலையில் கிடைக்கும் வரை ஆளும் பாஜக அரசுக்கு பெரும் திண்டாட்டம்தான் என்கின்றன கள நிலவரங்கள்.












Click it and Unblock the Notifications