சர்ச்சையைக் கிளப்புகிறது அஃப்சல் குருவின் 'சிறைக் குறிப்புகள்' புத்தகம்
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த அஃப்சல் குரு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்டார். சிறையில் இருந்த காலத்தில் அஃப்சல் குரு எழுதிய டைரிக் குறிப்புகளை 94 பக்கமாக தேசிய முன்னணி என்ற ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கம் உருவாக்கியுள்ளது.
ஸ்ரீநகர் ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புத்தகத்தை அஃப்சல் குருவின் சகோதரர் அஜாஸ் குரு வெளியிட்டார்.
மொத்தம் 5 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு இவை தனிச் சுற்றாக மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள்:
- 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த ஜெய்ஷ்-இ முகமது கமாண்டர் காசி பாபா, ஒரு மாவீரர்!
- ஆப்கானிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா முகமது உமர் நம்பிக்கைக்குரிய தலைவர்
- ஜம்மு காஷ்மீர் விடுதலைக்காக இரண்டு வழிகள்தான்.. ஒன்று ஜிஹாத் எனப்படும் புனிதப் போரில் ஈடுபடுவது அல்லது இடம் பெயருவது.. இங்கே இடம் பெயர் மதினா எதுவும் இல்லை.. அதனால் புனிதப் போர்தான் வழி.. ஒவ்வொரு முஸ்லிமும் புனிதப் போரில் ஈடுபட வேண்டும்.
- இஸ்லாம் போராடக் கற்றுக் கொடுத்திருக்கிறது. விலங்குகள் கூட தங்களது தேவைகளுக்காகப் போராடுகிறது..நாமும் போராட வேண்டும்.
இப்ப்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் இருப்பதால் இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில், இந்த புத்தகம் இந்தியாவுக்கு எதிரான சதியின் ஒரு அங்கம். இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும். ஜம்மு காஷ்மீரை சுடுகாடாக்க நினைப்போரின் சதி நிறைவேற அனுமதிக்கக் கூடாது என்றார்.