அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் அக்னி 5 ஏவுகணை 2வது முறையாக வெற்றிகரமாக சோதனை
அகர்தலா அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்த அக்னி 5 ஏவுகணை இன்று 2வது முறையாக வெற்றிகரமாக ஏவிப் பார்க்கப்பட்டது.
முற்றிலும் இந்தியத் தொலைநுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஏவுகணை இது. இந்த ஏவுகணையானது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையும் கூட. கிட்டத்தட்ட 5000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாகக் கூடிய வல்லமை படைத்தது. அதாவது சீனாவின் பெரும் பகுதியை இந்த ஏவுகணைத் தாக்கக் கூடிய திறன் கொண்டது.
இந்த ஏவுகணை ஏற்கனவே ஒரு முறை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 2வது முறையாக ஏவப்பட்டது. ஒடிஷாவின் வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணையானது, இன்று காலை 8.50 மணிக்கு ஏவிப் பரிசோதிக்கப்பட்டது.
தரையிலிருந்து தரையில் உள்ள இலக்குகளைத் தாக்கக் கூடியது அக்னி 5. இதில் ஒரு டன்னுக்கும் மேலான அணு ஆயுதத்தை ஏற்றி அனுப்பி தாக்கலாம். சோதனையின் முடிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதன் இறுதியில் ஏவுகணை சோதனை வெற்றி என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி இந்த ஏவுகணை முதல் முறையாக பரிசோதிக்கப்ட்டது. அப்போது அது வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
சீனாவைத் தாக்கலாம்
இந்த புதிய ஏவுகணை மூலம் சீனாவுக்கு இந்தியா கடும் சவால் விடுத்திருப்பதாக கருதப்படுகிறது. அதாவது சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் உள்பட பல முக்கிய நகரங்களை இந்த ஏவுகணை மூலம் நாம் தாக்கி அழிக்க முடியும்.
இந்தியாவிடம் ஏற்கனவே 700 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லக் கூடிய அக்னி 1, 2000 கி.மீ தொலைவிலான அக்னி 2, 2500 மற்றும் 3500 கிலோமீ்ட்டர் தொலைவிலான இலக்குகளைத் தாக்கக் கூடிய அக்னி3, அக்னி 4 ஆகிய ஏவுகணைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சில சோதனைகளுக்குப் பின்னர் அக்னி 5 ஏவுகணையும் ராணுவத்தில் சேர்க்கப்படும்.