கேரள எம்.பி., அகமது மரணம்.. லோக் சபாவில் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டுவந்தது காங்கிரஸ்
இ. அகமது மறைவு காரணமாக லோக் சபாவில் காங்கிரஸ் ஒத்தி வைப்பு தீர்மான கொண்டு வந்துள்ளது. மேலும், மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தாரிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவரும், கேரள மாநிலம், மலப்புரம் தொகுதி எம்பியுமான இ. அகமது மறைவு காரணமாக லோக்சபாவில் காங்கிரஸ் ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.
எம்பி, இ. அகமது நாடாளுமன்றத்திலேயே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 1ம் தேதி அதிகாலை மரணம் அடைந்தார். அன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், எம்பி இறந்ததால் அவையை ஒத்தி வைக்க வேண்டும் என்ற மரபை மீறி பட்ஜெட்டை தாக்கல் செய்தது மத்திய அரசு.
இதனைத் தொடர்ந்து நேற்று நாள் முழுக்க லோக் சபா ஒத்தி வைக்கப்பட்டு இன்று தொடங்கியது. அப்போது, காங்கிரஸ் எம்பி வேணுகோபால், அகமதுவின் மறைவிற்கான ஒத்தி வைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். மேலும், அகமது மகன் மற்றும் குடும்பத்தாரிடம் மருத்துவமனை நிர்வாகம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் புகார் கூறியுள்ளார்.
முன்னதாக, அகமது மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது மகன் அவரை பார்க்கச் சென்றார். அப்போது, அகமதுவை பார்க்க மகனுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி தரவில்லை. இதனால் தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அகமதுவின் மகன் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.