அகமதாபாத் விமான விபத்தில் பலியான பைலட் சுமீத் சபர்வால்.. தன் தந்தையிடம் கூறிய கடைசி வார்த்தைகள்
அகமதாபாத்: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த விமானி சுமீத் சபர்வால், விபத்துக்கு முன்பு தனது 90 வயதான தந்தையிடம் கூறிய கடைசி வார்த்தைகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

தீப்பிடித்து எரிந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர். தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த விமானத்தில் இரண்டு பைலட்டுகள் மற்றும் 12 ஊழியர்கள் இருந்துள்ளனர். இதில், 9 பேர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர். விமானி சுமீத் சபர்வால் (56), துணை பைலட் கிளைவ் குந்தர் இவர்கள் இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்களாவர். மிகவும் அனுபவம் வாய்ந்தவரான சுமீத் 8,200 மணி நேரமும், குந்தர் 1,100 மணி நேரமும் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர்களாவர்.
56 வயதான சுமீத் சபர்வாலுக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு 90 வயதான தந்தை உள்ளார். இந்நிலையில், சுமீர் தனது அப்பாவிடம் கடைசியாக பேசிய வார்த்தைகள் குறித்த தகவல்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரியாக இந்த விமான விபத்து நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 90 வயதான தனது தந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பணியில் இருந்து விலகுவதாக சுமீத் சுபர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சுமீத் தனது அப்பா புஷ்கராஜிடம், நான் அடுத்த மாதம் எனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, சுமீத்தின் நண்பர் லாண்டே கூறுகையில், சுமீத் எனும் நல்ல நண்பரை இழந்து தவிக்கிறேன். அவர் உயிரிழந்ததை எங்களால் நம்பவே முடியவில்லை. விபத்து நடக்கும் மூன்று நாட்களுக்கு முன்புதான் அவருடைய தந்தையிடம் பேசினார். அப்போது, பைலட் வேலையை ராஜினாமா செய்வதாகவும், வீட்டுக்கு வந்த பின்னர் உங்களை முழு நேரமும் கவனித்துக் கொள்வேன் என்று தெரிவித்திருந்தார்.
அதற்குள் இந்த கொடுமையான சம்பவம் நிகழ்ந்துவிட்டது. மகனின் இழப்பைத் தாங்க முடியாமல் புஷ்கராஜ் கடுமையான சோகத்தில் ஆழ்ந்துள்ளார். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.
லண்டனில் குடும்பத்துடன் செட்டிலாவதற்காக சென்ற தம்பதி, அவர்களது மூன்று குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம், லண்டனில் நர்ஸ் வேலையை ராஜினாமா செய்துவிட்டு கேரளத்தில் அரசு வேலையில் சேர்ந்து குடும்பத்துடன் இருக்கப்போகும் கனவுடன் இருந்த நர்ஸ், இறந்து போன தனது மனைவியின் அஸ்தியைக் கரைப்பதற்காக வந்து உயிரிழந்த கணவர், ஒன்றுமே அறியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் என விமான விபத்தில் உயிரிழந்த ஊழியர்கள், பயணிகள் ஒவ்வொருவரின் பின்னணி கதைகளும் கடும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications